சில்க் ஸ்மிதா உயிரோடு இருந்திருந்தால்.... இன்று...
சில்க்..சில்க்..சில்க்…நிஜமான படா பட்...
நடிக்க வீட்டை விட்டு ஓடிவந்த போது அவரது குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுபற்றி பின்னர் சில்க்கிடம் கேட்டதற்கு, “பணம், பங்களா வந்தபிறகு எல்லாம் சரியாயாகிவிட்டது ’’ என குடும்பத்தினரின் நிஜமுகத்தை நாசூக்காய்தான் சொன்னார். புகழ் கிடைந்ததும் வந்து சேர்ந்தவர்களை, காழ்ப்புணர்ச்சிகாட்டி பொதுவெளியில் அவமானப் படுத்தவில்லை.
சிவாஜி போன்ற மூத்த ஜாம்பவான்கள் வரும்போது செட்டில் கால்மேல்போட்டு அமர்திருக்கிறார்களாமே என்று கேட்டதற்கு அவர் பதற்றப்படவேயில்லை..
’’நான் சிறுவயதிலிருந்தே அப்படி கால்மேல் கால் போடடே அமர்ந்து வளர்ந்தவள். செட்டில் ஆடி வந்து விட்டு டயர்டாக அமரும்போது எனக்கு அதுதான் வசதி. அதையெல்லாம் விட்டுவிட்டுபோலியாக மரியாதை கொடுக்க நான் தயாரில்லை’’ என்று பட்டென்று சொன்னவர்.
எம்ஜிஆர் தலைமையில் திடீர் விழா என்றபோதும், ஏற்கனவே தெலுங்கு சூப்பர் ஸ்டாருக்கு கொடுத்த கால்ஷீட்டை கேன்சல் செய்தால், அதனை சமன் செய்ய சில மாதங்களாகும் என்றும் அதனால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் என்றும் தெரிய வந்ததால், எம்ஜிஆரின் விழாவை ஒதுக்கிவிட்டு ஷுட்டிங்கிற்கு போனவர்.
சாவித்திரி, சுஜாதா மாதிரி நடிக்க ஆசைப்பட்டவருக்கு கிடைத்தது கவர்ச்சி வேடங்கள்தான்.. ஒரு கட்டத்தில டாப் ஸ்டார் என்ற அந்தஸ்தை எட்டி, தயாரிப்பாளர்கள் அவர் காலடியில் தவமிருந்தபோதும், தனக்கு இந்த வெயிட்டான வேடம்தான் வேண்டும் என்று யாரையும் அவர் நிர்பந்தித்தது கிடையாது.
தன்னை நம்பி எதை எதிர்பார்த்து தயாரிப்பாளர்கள் வருகிறார்கள் என்பதும் அவர்களிடம் தனக்குள்ள செல்வாக்கை காட்டினால் குழப்பம் மிஞ்சி தர்ம சங்கடங்கள்தான் நேரும் என்று சொன்னவர் சில்க்.
200 படங்கள் நடித்த நிலையில் தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் குளறுபடி செய்யும் நடிகை சில்க் என்று குற்றம்சாட்டி பத்திரிகைகள் எழுதியபோது, ‘’நீங்கள் சொல்வது உண்மையென்றால், ஏன் தயாரிப்பாளர்கள் என்னை தொடர்ந்து நாடிவருகிறார்கள்’’? என பத்திரிகை உலகத்தையே திருப்பி கேட்டவர்.
அலைகள் ஓய்வதில்லை படத்தின் ரோல்தான் அவருக்கு மிகவும் பிடித்தது என்பதால் சில்க்கின் முதல் பேவரைட் இயக்குநர் பாரதிராஜாதான். அடுத்து பாலுமகேந்திரா..
சில்க் ஸ்மிதாவின் மனம் கவர்ந்த ஒரே நடிகர், வேறு யாரு நம்ம உலக நாயகன்தான்.
சரியான நேரத்தில் திருமணமாகி செட்டில் ஆவேன் என்று சொல்லிக்கொண்டுவந்த சில்க் ஸ்மிதாவுக்கு, கடைசியில் நிரந்தர வாழ்வு தந்தது தற்கொலைதான்.
எத்தனையெத்தனை மனிதர்கள்... எத்தனையெத்தனை ஏமாற்றங்கள்.. மர்மச்சாவு கண்ட மர்லின் மன்றோபோல் என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்கு தெரியும்? அவள் ஒரு தொடர்கதை படத்தின்
கண்ணதாசன் பாடல் வரிகள்தான் ஞாபகத்திற்கு வருகின்றன.
உயிரோடு இருந்திருந்தால் இன்று 57 வது பிறந்த நாளை கொண்டாடியிருப்பார்! ஆம். அவர் 1960 டிச,.2ம்தேதி பிறந்தவர்.
கட்டுரை - பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்