விஷ்ணு விஷாலின் தந்தையை தப்பிக்க விட மாட்டேன்..கொந்தளிக்கும் சூரி !
பணமோசடி வழக்கில் இருந்து நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை அவ்வளவு எளிதாக தப்பித்து விட முடியாது என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
கடந்த 2020-ம் அண்ட் ஆண்டு நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், முன்னாள் காவல்துறை இயக்குநருமான (டிஜிபி) ரமேஷ் குடாவ்லா மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர் நில பேரம் தொடர்பாக நடிகர் சூரியிடம் 2 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நகர காவல்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சூரி தாக்கல் செய்த மனுவின் பேரில் சைதாப்பேட்டையில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில், குடாவ்லா மற்றும் ராஜன் ஆகியோருக்கு எதிராக அடையாறு காவல்துறையால் எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டது. இந்த வழக்கு இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் சூரி இரண்டு முறை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது தவிர, நடிகர் தனது வழக்கு தொடர்பான 100 க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த வழக்கை, மத்திய குற்றப்பிரிவு மீண்டும் பதிவு செய்துள்ளது. ஓய்வு பெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்பு வேல்ராஜன் ஆகியோர் மீது குற்றப்பிரிவு போலீசார் 406 அறக்கட்டளை மோசடி மற்றும் 420 பணமோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பவும், அதன் பிறகு மேலும் விசாரணை நடத்தவும் குற்றப்பிரிவு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் நடிகர் சூரியின் தனியார் உணவகத்தை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு பேசிய சூரி, விடுதலை படம் பெரும்பகுதி நிறைவடைந்து விட்டது. படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெரும். சமீபத்தில் ரிலீஸான படங்கள் பெற்ற அதே வெற்றியை பெற்று மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் அளிக்கும் என கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து விஷ்ணு விஷால் தந்தை மீதான பண மோசடி வழக்கு குறித்த கேள்விக்கு பதிலளித்த சூரி ,"குற்றத்தை நிரூபிக்க தான் நீதிமன்றமும், காவல்துறையும். அவ்வளவு எளிதாக யாரும் எதையும் சொல்லிவிட்டு தப்பிக்க முடியாது. இறைவன் இருக்கிறான். இறைவனுக்கு இணையாக நீதிமன்றத்தை நினைக்கிறேன். நீதிமன்றம் நியாயம் வழங்கும் என நம்புகிறேன்" என தெரிவித்தார்.