“என்னால் எஸ்.பி.பி.க்கு கொரோனா தொற்று ஏற்பட்டதா?”... பதறியடித்து விளக்கம் கொடுத்த பிரபல பாடகி...!
இதுகுறித்து விளக்கம் அளிப்பதற்காக பாடகி மாளவிகா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 14ம் தேதி முதலே அவருடைய கவலைக்கிடமான நிலையில் உள்ளது. நேற்று கூட்டு பிரார்த்தனைக்கு பிறகு மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூட, எஸ்.பி.பி.பாலசுப்ரமணியம் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், வெண்டிலேட்டர் மற்றும் எக்மா கருவிகளுடன் சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்தது.
இந்நிலையில் எஸ்.பி.பி.பங்கேற்ற டி.வி. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடகி மாளவிகாவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மூலமாக தான் எஸ்.பி.பி.க்கு கொரோனா தொற்று பரவியதாகவும், எஸ்.பி.பி.இப்படி கவலைக்கிடமான நிலையில் போராட மாளவிகா தான் காரணம் என்றும் சோசியல் மீடியாக்களில் தீயாய் ஒரு தகவல் பரவி வந்தது.
இதுகுறித்து விளக்கம் அளிப்பதற்காக பாடகி மாளவிகா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிந்தும் நான் எஸ்.பி.பி. பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக வதந்தி பரப்பப்படுகிறது. ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நான் ஜூலை 31ம் தேதி பங்கேற்றேன். அப்போது அனைத்து கொரோனா தடுப்பு நடவடிக்களையும் முறையாக பின்பற்றினேன். ஆகஸ்ட் 5ம் தேதி எஸ்.பி.பி. சாருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக வீடியோ வெளியிட்டிருந்தார். அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இசைகலைஞர்கள் சிலருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து நான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற காரணத்தால் கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன். நான் மட்டுமின்றி அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 20 பாடகர்களும் பரிசோதனை மேற்கொண்டனர். அதன் பின்னர் எனது ரிப்போர்ட் பாசிட்டிவ் என வந்தது ஆகஸ்ட் 8ம் தேதி, அதற்கு முன்பு எனக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பே இல்லை.
இதையும் படிங்க: நயன்தாராவுக்கு போட்டியாக களமிறங்கும் கீர்த்தி சுரேஷ்... பிரபல நடிகருடன் இப்படியொரு வேடத்தில் நடிக்கிறாரா?
கொரோனா பிரச்சனையால் கடந்த 5 மாதங்களாக எங்கள் வீட்டிற்கு பணிப் பெண் கூட வருவது இல்லை. எனக்கு 2 வயதில் மகள் இருக்கிறார். நான் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டிருக்கிறேன். கடந்த 5 மாதங்களில் எந்த ரெக்கார்டிங்கிற்கோ அல்லது ஷூட்டிங்கிற்காகவோ நான் வெளியே செல்லவில்லை. டிவி நிகழ்ச்சிக்காக செல்லும் போது கூட காரில் எனக்கும், டிரைவருக்கும் இடையே சீல்டு வைத்திருந்தேன் என அவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தேன் என தெரிவித்துள்ளார்.