உனது பெயரிலேயே இருந்தது விவேகம்...விதி ஏன் உன் உயிரை பறிக்க காட்டியது இந்த வேகம் டி.ராஜேந்தர் இரங்கல்!
நடிகர் விவேக் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து, பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான விவேக் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் விவேக் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து, பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான விவேக் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மாரடைப்பு காரணமாக நேற்று காலை 11 மணிக்கு சுயநினைவு இன்றி, சென்னை வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி இன்று காலை 4 :35 மணி அளவில் உயிரிழந்தார். இவரது மறைவு ஒட்டு மொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தொடர்ந்து பல பிரபலங்கள், மற்றும் ரசிகர்கள்... விருகம்பாக்கத்தில் உள்ள நடிகர் விவேக்கின் வீட்டில் சுமூக இடைவெளியை கடைபிடித்து, தங்களுடைய அஞ்சலியை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் இன்று மாலை 5 மணிக்கு விருகம்பாக்கத்தில் உள்ள தகன மேடையில் அவருடைய உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இவரது மறைவிற்கு, தொடர்ந்து பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், தமிழ் திரையுலகில் இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பல்வேறு திறமைகளோடு விளங்கும் டி.ராஜேந்தர் அறிக்கை வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது...
"நண்பா, விவேக் என்று உனது பெயரிலேயே இருந்தது விவேகம்,
விதி ஏன் உன் உயிரை பறிக்க காட்டியது இந்த வேகம்.
மறைந்துவிட்ட அப்துல் கலாம் அய்யா அவர்களின் கனவை நிறைவேற்ற நீ மரக்கன்றுகளை நட்டாய்,
நீ வளர்க்க நினைத்தது மரம் மட்டுமல்ல, அறம்!
உம்மை இழந்து வாடி தவிக்கிறது மக்களின் மனம்.
நீ ஏன் மறைந்தாயோ தெரியவில்லை காரணம்,
எங்கள் நெஞ்சமெல்லாம் ஆகிவிட்டது ஆறாத ரணம்!
எமலோகம் சென்று எமனையே சிரிக்க வைக்க சென்றாயோ,
உன் தமிழக ரசிகர்களை மட்டும் அழ வைத்து விட்டாயோ!
நீ காலமானாய் என்பதை நம்ப முடியவில்லை,
கண்ணீர் குறையவில்லை!
நகைச்சுவை நடிகனாய் நீ சிரிக்க வைத்தாய், சிந்திக்க வைத்தாய்,
இன்று ஏன் எங்களை கண்ணீர் சிந்த வைத்தாய்
அன்பனை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், தமிழ் திரையுலக ரசிகர்களுக்கும் எனது ஆறுதலை கூறி கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். என தெரிவித்துள்ளார்.