நடிகை யாஷிகா ஆனந்த் இப்போது எப்படி இருக்கிறார்..? மூன்று மாதங்களுக்குப் பிறகு வெளியான முதல் வீடியோ..!
அறுவைச் சிகிச்சைகளுக்குப் பிறகு மருத்துவமனையிலேயே சிச்சை பெற்று வந்தார் யாஷிகா. காயங்கள் ஆறிய நிலையில் அவருக்கு பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டுவந்தது.
மூன்று மாதங்களுக்கு முன்பு மாமல்லபுரம் அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்த நடிகை யாஷிகா ஆனந்த், மருத்துவமனையில் நடப்பதற்கு முயற்சி செய்யும் பிசியோதெரபி வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
ஈசிஆர் சாலையில் மாமல்லபுரத்தை அடுத்த சூளேரிக்காடு பகுதியில் கடந்த ஜூலை மாதம் 25-ஆம் தேதி அன்று அதிகாலையில் நடிகை யாஷிகாவும் அவருடைய நண்பர்களும் வந்த சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரின்மீது மோதியது. இந்த விபத்தில் நடிகை யாஷிகாவின் தோழியான ஹைதராபாத்தைச் சேர்ந்த வள்ளி செட்டி பவானி என்று இன்ஜினியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் விபத்தில் சிக்கி நடிகை யாஷிகா மற்றும் இரு ஆண் நண்பர்கள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் சிக்கியவர்களை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
முதல் கட்ட சிகிச்சையை அரசு மருத்துவமனையில் பெற்ற யாஷிகாவும் அவருடைய நண்பர்களும் மேல் சிகிச்சைக்காக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான காரை நடிகை யாஷிகாதான் ஓட்டி வந்தார் என்றும் தகவல்கள் வெளியாயின. இதனையத்து யாஷிகா மீது போலீஸார் இந்திய தண்டணைச் சட்டம் 279-337-304 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். மேலும் விபத்தால் யாஷிகாவுக்கு பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது.
அவருக்கு பலமுறை அறுவைச் சிகிச்சைகள் நடைபெற்றன. அறுவைச் சிகிச்சைகளுக்குப் பிறகு மருத்துவமனையிலேயே சிச்சை பெற்று வந்தார் யாஷிகா. காயங்கள் ஆறிய நிலையில் அவருக்கு பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டுவந்தது. இதனையடுத்து நடப்பதற்கான பயிற்சியையும் தொடங்கி, யாஷிகா மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் மருத்துவமனையில் தனக்கு வழங்கப்பட்டு வரும் நடைப் பயிற்சி வீடியோவை, அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை யாஷிகா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் இரு பக்கமும் சப்போர்ட்டிங் உபகரண உதவியுடன் யாஷிகா நடக்க மேற்கொள்ளும் பயிற்சி இடம் பெற்றுள்ளது.
விபத்து நடந்த அடுத்த சில நாட்களில், அதுகுறித்து இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்து தன்னுடைய நிலையை யாஷியா ஆனந்த் விளக்கியிருந்தார். இந்நிலையில் 3 மாதங்கள் கழித்து தற்போது நடிகை யாஷிகா தரப்பில் முதன் முறையாக வீடியோ நடைப் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது.