என்ன விட்டிருங்க..! நான் யாரும் இல்லை…! தன்னடக்கத்துடன் அறிமுகமாகி இருக்கும் தமிழ்படம் 2 பாடல்;
தமிழ் படம்-2 ரிலீசாகும் முன்பே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. சி.எஸ்.அமுதன் இயக்கத்தில், சிவா நடித்திருக்கும் இந்த திரைப்படத்தின் கையில், தமிழ் திரையுலகே சிக்கி தவிக்கிறது. அந்த அளவிற்கு ஒட்டு மொத்த தமிழ் படங்களையும், ஒன்று சேர்த்து கலாய்த்திருக்கிறார் இயக்குனர் அமுதன். அதிலும் இம்முறை பல முக்கிய அரசியல் நிகழ்வுகளும் கூட, இந்த படத்தில் காமெடி காட்சிகளாக இடம் பெற்றிருக்கின்றன.
சமீபத்தில் ரிலீசாகி இருந்த இந்த திரைப்படத்தின் டீசரில் இடம் பெற்றிருந்த, காமெடி கலந்த காட்சிகள் காரணமாக, தமிழ்படம் 2-ன் புகழ் உச்சத்தை எட்டியது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் கதாநாயகன் அறிமுக பாடல், இன்று வெளியாகி இருக்கிறது.
தமிழ்படத்தின் முதல் பாகத்தில் இடம் பெற்றிருந்த, அறிமுக பாடலின் தொடக்க வரிகளுடன் தான், இந்த பாடலும் ஆரம்பித்திருக்கிறது. ஆனால் போகப்போக தான் இந்த பாடல், பிற கதாநாயகர்களின் அறிமுக பாடல்களை எல்லாம் கலாய்ப்பதை அறிய முடிகிறது.
”பச்சை மஞ்சை சிகப்பு தமிழன் நான்” பழைய பாடல், ”என்ன விட்டுருங்க…..! நான் யாரும் இல்ல , நான் நாயும் இல்ல, டைகர் இல்ல, ஜிராஃபி இல்ல” இது தான் இப்போது வந்திருக்கும் புதிய பாடல். இந்த பாடலை கேட்ட பிறகு, இன்னும் கொஞ்ச நாளைக்கு யாரும் சிங்கம் புலி-னு சொல்லிக்க யோசிக்க தான் செய்வாங்க. அப்படி இருக்கிறது இந்த தமிழ்படம் 2-ன் பாடல்.
மேலும் இந்த பாடலின் தொடக்க காட்சிகளில், ஒரு புரட்சி களத்தில் சிவா நின்று, போலீஸார்களை சமாளிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கிறது. ஒரு வேளை தூத்துக்குடி சம்பவம் கூறித்து ஏதாவது கூற வருகிறாரா? சி.எஸ்.அமுதன் என்பது அவரே கூறினால் தான் உறுதியாக தெரியும்.