hanshiga become a mother

தன்னுடைய பிறந்த நாளின்போது ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வரும் நடிகை ஹன்சிகா, தற்போது 30 ஆவது குழந்தையை தத்தெடுத்துள்ளார். இந்த 30 குழந்தைகளுக்கும் தான்தான் தாய் என்றும் ஹன்சிகா உருகி வருகிறார்.

நடிப்புத் தொழிலுக்கிடையே நடிகை ஹன்சிகா சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். தான் சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது, வீடுகள் வாங்குவது, வியாபாரம் செய்வது என்று இருப்பவர்களுக்கு மத்தியில் சம்பளத்தில் ஒரு பகுதியை ஆதரவற்றோருக்கு ஒதுக்கி உதவி செய்து வருகிறார்.

ஒவ்வொரு பிறந்தநாளிலும் ஆதரவற்ற குழந்தைகளை ஹன்சிகா தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இப்போது அந்த குழந்தைகள் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.



இந்த உலகத்தில் குழந்தைகளை கஷ்டப்பட்டு பெற்றுத்தான் அம்மா ஆவார்கள். நானோ குழந்தை பெற்றுக்கொள்ளாமலேயே ஆதரவற்ற 30 குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறேன் என்று இது குறித்து ஹன்சிகா கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது மிகப்பெரிய பெரிய பாக்கியம் என்றும் எனது வயிற்றில் பிறக்காவிட்டாலும் இவர்கள் என்னுடைய குழந்தைகள்தான், நான்தான் அவர்களுடைய தாய் என ஹன்சிகா உருக்கமாக தெரிவித்துள்ளார்.

அம்மாவை காணாத அந்த குழந்தைகள் என்னைத்தான் தாயாக பார்க்கிறார்கள். அம்மா என்று என்னை அவர்கள் அழைப்பதை பார்த்து நான் உருகிப் போகிறேன். அவர்களுடைய பராமரிப்புக்கு பணம் மட்டும் ஒதுக்கிவிட்டு சும்மா இருப்பது இல்லை. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அவர்கள் பக்கத்தில் இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்..



பெற்றோரை பார்க்காத அந்த குழந்தைகளுக்கு இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கிறது. வயதானதும் பெற்றோர்களை பிள்ளைகள் கைவிடும் போக்கு சமூகத்தில் உள்ளது. ஆதரவற்ற அந்த முதியோர்களுக்காக புதிய இல்லம் ஒன்றை கட்டி வருகிறேன். அவர்களை அங்கு தங்க வைத்து பராமரிக்க முடிவு செய்துள்ளேன் என்று ஹன்சிகா கூறியுள்ளார்.