Jail movie : ‘ஜெயில்’ பட ரிலீசுக்கு தடைகோரி தொடரப்பட்ட வழக்கு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இயக்குனர் வசந்தபாலனின் ஜெயில் திரைப்படத்தை (Jail Movie) வெளியிட தடை விதிக்கக்கோரி ஸ்டூடியோ கீரீன் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணநிதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜெயில்'. க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்சின் ஸ்ரீதரண் மாரிதாசன் இப்படத்தை தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தை டிசம்பர் 9-ந் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், இதனை வெளியிட தடை விதிக்க கோரி ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
ஜெயில் படத்தின் ஒட்டுமொத்த விநியோக உரிமையை தங்களுக்கு வழங்கி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது சட்டவிரோதமாக படத்தை வெளியிட முயற்சி நடப்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டுமென ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
கடந்த மாதம் 26-ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, படத்தின் தயாரிப்பு நிறுவனமான கிரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸ் ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பு தரப்பின் விளக்கத்தை கேட்ட நீதிபதி, ஜெயில் படத்தை ரிலீஸ் செய்ய தடை இல்லை என உத்தரவிட்டார். இதன்மூலம் ஜெயில் படம் திட்டமிட்டபடி வருகிற டிசம்பர் 9-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என தயாரிப்பாளர் ஸ்ரீதரண் தெரிவித்துள்ளார்.