Jail movie : ஜெயில்... ஜெய் பீம் மாதிரியான படம்... இதுலயும் அரசியல் இருக்கு - அடிச்சு சொல்லும் ஜிவி பிரகாஷ்
ஜெயில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் ஜிவி பிரகாஷ், இயக்குனர் வசந்த பாலன், தயாரிப்பாளர் ஸ்ரீதரண் மாரிதாசன் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜெயில்'. ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அபர்ணநிதி நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், ரோபோ சங்கர், ரவி மரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை. க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்சின் ஸ்ரீதரண் மாரிதாசன் தயாரித்துள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் இருந்தது. தற்போது அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு, இப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற டிசம்பர் 9-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
இதையொட்டி இப்படக்குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் ஜிவி பிரகாஷ், இயக்குனர் வசந்த பாலன், தயாரிப்பாளர் ஸ்ரீதரண் மாரிதாசன் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இதில் ஜிவி பிரகாஷ் பேசியதாவது: “ஜெயில் படத்துல வசந்த பாலன் ரொம்ப முக்கியமான அரசியல் மெசேஜ் ஒன்னு சொல்லிருக்காரு. இன்றைய காலகட்டத்தில் உலகளவிலும், இந்திய அளவிலும் இது மிகவும் அழுத்தமான மெசேஜா இருக்கும். ஜெய் பீம் ரிலீசானப்போ எந்தமாதிரி எல்லோராலும் பேசப்பட்டதோ அதேபோல் இந்த படமும் பேசப்படும்.
பெரும் வலியை தாங்கிக்கொண்டு இந்த படத்தை பண்ணிருக்கோம். 3 வருஷ உழைப்பு இது. இத்தனை நாள் காத்திருப்புக்கு இப்படம் நிச்சயம் மதிப்புள்ளதாக இருக்கும். இடம் மாற்றுதல் எத்தனை குடும்பங்களுக்கு எவ்வளவு பெரிய பாதிப்பை கொடுத்திருக்கிறது என்பதை இப்படம் அழுத்தமாக பதிவு பண்ணிருக்கோம். இது ஒரு பொன்னான படமாக மாறும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.