“ராமர் பாலத்திற்கு பதறியவர்கள் நியூட்ரினோவுக்கு ஆதரவு காட்டும் மர்மம் என்ன..?” இயக்குனர் கௌதமன் கேள்வி..!
‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்தை இயக்கியுள்ள இயக்குனர் ராகேஷ், தற்போது காவிரி விழிப்புணர்வு குறித்து ‘தவிச்ச வாய்க்கு தண்ணி’ பாடல் ஒன்றை. உயிர்கொடு காவிரி’ என்கிற வீடியோ ஆல்பமாக. இந்திராஸ் நிறுவனர் பூபேஷ் நாகராஜன் ஆதரவுடன் தயாரித்து இயக்கியுள்ளார். சுமார் 5 நிமிடம் கொண்ட இந்த பாடலை கவிஞர் வைரபாரதி எழுதியுள்ளார். ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ மற்றும் விரைவில் வெளிவர இருக்கும் ‘கோலிசோடா-2’ படங்களுக்கு இசையமைத்துள்ள அச்சு இந்தப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். ராகுல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப்பாடல் வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் திரைப்பட இயக்குனர்கள் கௌதமன், மீரா கதிரவன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இந்திரா புராஜெக்ட்ஸ் நிறுவனர் பூபேஷ் நாகராஜன், நடிகர்கள் அரீஷ்குமார், அபிசரவணன், மைம் கோபி, இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான பி.ஜி.முத்தையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் கௌதமன் பேசுகையில் , “நமக்கு சோறு தருபவள் தாய்.. அந்த சோறுக்கு அரிசி தருபவன் விவசாயி. தமது நிலத்தில் விளைந்த பயிர்கள் சிரித்து பார்த்த, தாய்க்கு சமமான நமது விவசாயிகள் அந்த நிலம் நீர்காணாமல் வெடித்துப்போய் கிடப்பதை காண சகிக்காமல் தான் நெஞ்சு வெடித்து இறந்தார்கள். எந்த மரத்தின் நிழலில் படுத்து உறங்கினானோ, அதிலேயே தூக்கிட்டு சாகிறான், இத்தனை சாவுகள் விழுந்தபின்னும் கூட இன்னும் தன்னெழுச்சியாக விவசாயிகளுக்காக போராட முடியவில்லை என்கிற குற்ற உணர்ச்சி இப்போதும் இருக்கிறது.
ஒரு படைப்பாளி என்பவன் எப்போது தனது சமூகத்திற்கு பயன்படும் விதமாக படைப்புகளை உருவாக்குகிறானோ அவன் தான் உண்மையான படைப்பாளி.
எங்களுக்கு இந்திய ஒற்றுமையை குலைக்கவேண்டும் என்கிற எண்ணமெல்லாம் இல்லை. சுதந்திரத்திற்கு முன்னும் சரி, பின்னும் சரி, அதிகமாக உயிரை கொடுத்தவர்கள் தமிழர்கள் தான். இதை திட்டமிட்டு மறைக்கிறார்கள்... சாகவேண்டும் என்பது என்ன எங்கள் தலைவிதியா..?
கூடங்குளம் அணு உலையை ஏன் கேரளாவில் அனுமதிக்காமல் அடித்து துரத்தினார்கள்.? அவர்கள் மானமுள்ள மலையாளிகள். ஸ்டெர்லைட், நியூட்ரினோ திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்தால் நம் கதி என்ன ஆகும்..? இந்த உலகம் எப்படி தோன்றியது என்கிற ஆய்வை இந்த பூமித்தாயை வெடிவைத்து தகர்த்து, உலகின் ஆதி இனமான தமிழர்களை அழித்துதான் கண்டறிய வேண்டுமா..? சாகர்மாலா என்கிற மீனவர்களை நசுக்கும் திட்டம் யாரை திருப்திப்படுத்துவதற்காக..? சேதுசமுத்திர திட்டத்தால் ராமர் பாலம் அழியும் என கூறி அதை நிறுத்தினீர்களே. இங்கே நியூட்ரினோவை அமல்படுத்தினால், தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான முல்லை பெரியாறு அணையே தரைமட்டமாகிவிடும்.. காவிரி இயற்கை எங்களுக்கு கொடுத்த கொடை.. அதை ஏன் நாம் விட்டுக்கொடுக்க வேண்டும்..? என தனது உணர்வுகளை வெளிப்படுத்தினார்.