Jai Bhim not get OSCAR : சூர்யா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் ஜெய்பீம் படம் இடம்பெறவில்லை...
உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பது உண்டு. அந்த வகையில் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், சூர்யா முக்கிய வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் 'ஜெய்பீம்'. ஓடிடி தளத்தில் கடந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்த திரைப்படம் மொழி, இனம், கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.

இந்த திரைப்படம் 1990களில் நடந்த உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் மீது செய்யாத தவறுக்காக காவல்துறையால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களை தோலுரிக்கும் விதமாக எடுக்கப்பட்டிருந்தது. இதில் பாதிக்கப்பட்ட செங்கேணிக்கு (பார்வதி அம்மாள்) நீதி கிடைக்க சட்ட ரீதியாக போராடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார்.

பல்வேறு தடைகளை கடந்து சாதித்த ஜெய் பீம் படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்து வருகிறது. குறிப்பாக அண்மையில் ஆஸ்கர் கமிட்டியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் ஜெய் பீம் படத்தின் காட்சி இடம்பெற்றது. அந்த யூடியூப் பக்கத்தில் ஒரு தமிழ் படத்தின் காட்சி இடம்பெறுவது இதுவே முதன்முறை. மேலும் 94-வது ஆஸ்கர் விருதுக்காக போட்டியிடும் படங்களின் பட்டியலில் ஜெய் பீம் படமும் இடம்பெற்றுள்ளது.

இதனிடையே 5000 அமெரிக்க டாலர்கள் பணம் கொடுத்து தான் ஜெய் பீம் படத்தின் காட்சியை ஆஸ்கர் யூடியூப் சேனலில் இடம்பெறச் செய்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி சர்ச்சையை கிளப்பியது. இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சூர்யா ரசிகர்கள் அதன் உண்மை பின்னணி குறித்து விளக்கி உள்ளனர்.

அதன்படி ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் ஒரு படத்தின் காட்சி இடம்பெற வேண்டும் என்றால் இதற்காக முதலில் வீடியோவை சமர்பிப்பதற்காக 5 ஆயிரம் டாலர் செலுத்த வேண்டுமாம். அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் வீடியோக்களின் தரத்தை மதிப்பாய்வு செய்த பிறகு தான் வீடியோவை யூடியூப் பக்கத்தில் பதிவேற்ற ஆஸ்கர் குழு அனுமதிக்குமாம்.

பணம் செலுத்தி சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து வீடியோக்களும் அதில் இடம்பெறாது. அவற்றுள் தகுதி உடையவை என குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட வீடியோக்கள் மட்டுமே இடம் பெறும். எனவே பணம் செலுத்த வேண்டும் என்பது ஆஸ்கார் கமிட்டியின் விதிமுறை என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது.
அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் ஜெய் பீம் இடம்பெற்றதை அடுத்து, ரசிகர்கள் இப்போது படத்திற்கு ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்படுகிறார்கள். இந்நிலையில் படம் ஆஸ்கரை தட்டி செல்ல வேண்டும் என்கிற ஆசையில் ரசிகர்கள் ஜெய் பீம் ஹேஸ் டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்..
ஆனால் திடீர் திருப்பமாக ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் ஜெய்பீம் படம் இடம்பெறவில்லை..இது படக்குழு மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
