film review

நடிகையர் திலகம் சாவித்திரி தேவியின் காவியம், திரைப்படமாக இன்று தமிழ்திரையரங்குகளில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தென்னிந்திய திரையுலகையே தனது அபாரமான நடிப்புத்திறமையால் கட்டிப்போட்டவர் சாவித்திரி தேவி. கருப்பு வெள்ளை திரையில் இவரின் நடிப்பு காவியம் மக்கள் மனதில் இன்றளவு நீங்காத இடம் பெற்றிருக்கிறது. அதற்கு இந்த திரைப்படத்திற்கு கிடைத்திருக்கும் பிரம்மாண்ட வரவேற்பே ஒரு சான்று.

பல்வேறு விமர்சனங்களுக்கு இடையே, சாவித்திரி தேவியாக வேடமேற்று நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷின் நடிப்பு பாராட்டிற்குரியது. திரையில் சாவித்திரி தேவியாகவே அவர் வாழ்ந்திருப்பதாகவே தோன்றுகிறது. 14 வயதில் நாடகங்கத்துறையில் இருந்து திரைத்துறைக்குள் நுழைந்தது முதல் சாவித்திரியின் ஒவ்வொரு படி முன்னேற்றத்தையும் இத்திரைப்படத்தில் காணும் போது வியப்பு மேலிடுகிறது.

திரையுலகில் பல தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை அள்ளி கொடுத்து, தானும் பல வெற்றிகளை அள்ளி குவித்த சாவித்திரி தன் வாழ்நாளின் கடைசி தருணங்களை குடித்து குடித்தே அழித்தார். என பல ஊடகங்கள் கூறியிருக்கின்றன. ஆனால் தன் வாழ்வில் அவர் அனுபவித்த மன அழுத்தம் எவ்வளவு கடுமையாக இருந்தது என்பதையும், அவரின் அந்தநிலைக்கு காரணம் என்ன என்பதையும் ரசிகர்களுக்கு கூறியிருக்கிறது “நடிகையர் திலகம்” திரைப்படம்.

வேகமாக கார் ஓட்டுவதில் சாவித்திரியின் ஆர்வத்தை பார்க்கும் போது அவரின் தைரியத்தின் முகமும், உதவி என வந்தவருக்கு வாரி வழங்குவதில் அவரின் கருணையும் தெரிகிறது. என்ன தான் பெரிய நடிகையாக இருந்தாலும், அவர் ஏங்கியது எல்லாம் உண்மையான அன்பிற்காக மட்டும் தான், என்பதும் திரையில் தெரிகிறது.

ஜெமினிகணேசனாக துல்கர் சல்மான் கச்சிதமாக நடித்திருக்கிறார். சாவித்திரி மற்றும் ஜெமினி கணேசன் இடையேயான காதல் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் அருமை.இந்த திரைப்படத்தை இளம் இயக்குனரான அஸ்வின் நாக் இவ்வளவு முதிர்ச்சியுடன் எடுத்திருப்பது பாராட்டத்தக்கது.

சமந்தா, பிரகாஷ் ராஜ் ,விஜய் தேவரகொண்டா என ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை உணர்ந்து நடித்திருக்கின்றனர். திரையுலகில் நடிகையர் திலகத்தின் நடிப்பை பார்த்து வியந்தவர்களுக்கு அவரின் வாழ்க்கையை பார்த்து வியக்க வைக்கிறது இந்த நடிகையர் திலகம் திரைப்படம். மொத்தத்தில் நடிகையர் திலகம் ஒரு மகா நடிகையின் சகாப்தம் .