Dhruva Natchathiram: விக்ரம் - கவுதம் மேனன் இடையே மீண்டும் மோதல்... சிக்கலில் துருவ நட்சத்திரம்
நடிகர் விக்ரம் கோப்ரா, பொன்னியின் செல்வன், மகான் என அடுத்தடுத்து பல்வேறு படங்களில் கமிட் ஆனதால் ‘துருவ நட்சத்திரம்’ படம் கிடப்பில் போடப்பட்டது.
சியான் விக்ரமும் ஸ்டைலிஷ் இயக்குனர் கவுதம் மேனனும் முதன்முறையாக இணைந்து பணியாற்றிய படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்தப்படத்தில், ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். அவர்களுடன் சிம்ரன், ராதிகா, டிடி மற்றும் பார்த்திபன் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.
ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். மிக பிரம்மாண்டமாக தயாரிக்கப்படும் இந்தப் படத்தில், விக்ரம் உளவுத்துறை அதிகாரியாக நடித்துள்ளார். 'துருவ' நட்சத்திரம் படத்தின் பெரும்பாலான காட்சிகள், துருக்கி, ஜார்ஜியா உள்ளிட்ட வெளிநாடுகளில் கடந்த 2018-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்டன. பைனான்ஸ் பிரச்சனை காரணமாக எஞ்சியுள்ள காட்சிகளை முடிக்க முடியாமல் போனது.
இதையடுத்து நடிகர் விக்ரம் கோப்ரா, பொன்னியின் செல்வன், மகான் என அடுத்தடுத்து பல்வேறு படங்களில் கமிட் ஆனதால் ‘துருவ நட்சத்திரம்’ படம் கிடப்பில் போடப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடித்துக் கொடுக்க நடிகர் விக்ரம் சமீபத்தில் 15 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி இருந்தாராம்.
ஆனால் இயக்குனர் கவுதம் மேனன் படப்பிடிப்பைத் தொடங்காமல் விக்ரமை டப்பிங் பேச சொன்னதால், தற்போது இருவருக்கும் இடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாம். இதனால் துருவ நட்சத்திரம் படத்தை மீண்டும் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.