மூக்குத்தி அம்மனே போற்றி! போற்றி!! அம்மனுக்காக விரதமிருக்கும் லேடி சூப்பர் ஸ்டார்! எதற்காகத் தெரியுமா?
தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. 'பிகில்' வெற்றியைத் தொடர்ந்து, 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்துடன் அவர் இணைந்து நடித்துள்ள 'தர்பார்' படம், வரும் பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது.
இதனையடுத்து, தனது காதலரும், இயக்குநருமான விக்னேஷ் சிவன் தயாரிக்கும் 'நெற்றிக்கண்' படத்தில் நடித்துவரும் நயன்தாரா, அதோடு, ஆர்.ஜே.பாலாஜி நடித்து இயக்கும் மூக்குத்தி அம்மன் படத்திலும் கமிட்டாகியுள்ளார். ஆர்.ஜே.பாலாஜி இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்தில், அம்மனாக நயன்தாரா நடிக்கவுள்ளார் என்பதுதான் ஸ்பெஷல்.
அவரது திரையுலகப் பயணத்தில் அவர், அம்மனாக நடிப்பது இதுதான் முதல்முறை. இதனால், 'மூக்குத்தி அம்மன்' படத்திற்காக விரதம் மேற்கொள்கிறாராம் நயன்தாரா. இந்தப் படம் முடியும் வரை அசைவத்தை தவிர்த்து, வெறும் சைவ உணவை மட்டுமே உட்கொள்ள அவர் முடிவு செய்திருக்காராம். இதற்கு முன்னேர், தெலுங்கில் 'ராம ராஜ்ஜியம்' படத்தில் சீதையாக நடித்தபோது, இதேமாதிரி விரதம் இருந்து நயன்தாரா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
'எல்.கே.ஜி.' படத்தின் மூலம் ஹீரோவாக ப்ரமோஷனான ஆர்.ஜே.பாலாஜி, 'மூக்குத்தி அம்மன்' படத்தை இயக்குநர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்குகிறார். கடவுள் பக்தி அதிகம் கொண்ட ஆர்.ஜே.பாலாஜிக்கு, கன்னியாகுமரியில் இருக்கும் பவானி அம்மன் கதையை படமாக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசையாம். அந்த அம்மனுக்கு மூக்குத்தி அம்மன் என்ற பெயரும் உண்டு என்பதால், அதையே படத்தின் தலைப்பாக்கி, அதில், அம்மனாக யாரை நடிக்க வைப்பது என அவர் யோசித்தபோது, நயன்தாராதான் மனதில் வந்தாராம்.
நானும் ரவுடிதான் படத்தில் இணைந்து நடித்திருந்ததால் அப்போதிலிருந்தே நயன்தாராவுடன் நட்பு பாராட்டிவந்த ஆர்.ஜே.பாலாஜி, 'மூக்குத்தி அம்மன்' படத்திற்கான கதையை சொல்லவும், லேடி சூப்பர் ஸ்டாரும் ஓ.கே. சொல்லிவிட்டாராம். அப்போது, படத்தை முழு விரதம் இருந்து எடுக்க முடிவெடுத்திருப்பதாகவும், ஏற்கெனவே தன்னுடைய படக்குழுவில் இருப்பவர்கள் அசைவத்தை தவிர்த்து சைவ உணவை மட்டுமே சாப்பிடுவதாகவும் நயன்தாராவிடம் ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளாராம்.
இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட நயன்தாரா, தானும் 'மூக்குத்தி அம்மன்' படம் முடியும் வரை விரதம் இருப்பதாக சொல்லி ஆர்.ஜே.பாலாஜிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். எதுஎப்படியோ, மூக்குத்தி அம்மனுக்காக நயன்தாரா மேற்கொள்ளும் விரதத்திற்கு பலன் கிடைக்குமா? அம்மன் அருள்புரிவாரா? என்பது கோடையில் படம் ரிலீசான பிறகுதான் தெரியும்