வேதனையின் உச்சத்தில் எடுத்த முடிவா... வேணாம் தலைவரே... வேணாம் - செல்வராகவனை அலர்ட் செய்யும் ரசிகர்கள்
மோகன் ஜி இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக நேற்று ஒரு அறிவிப்பு வெளியிட்ட செல்வராகவனுக்கு ரசிகர்கள் அட்வைஸ் செய்து வருகிறார்கள்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். தற்போது தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தை இயக்கி வருகிறார். இது ஒருபுறம் இருந்தாலும், தற்போது பிசியான நடிகராகவும் வலம் வருகிறார் செல்வராகவன்.
அதன்படி அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காயிதம் படத்தில் நடித்து முடித்துள்ள அவர், அடுத்ததாக விஜய்யின் பீஸ்ட் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மோகன் ஜி இயக்கும் புதிய படத்தில் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக நேற்று ஒரு அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் நடிக்க ஆவலோடு இருப்பதாக செல்வராகவன் தெரிவித்திருந்தார்.
செல்வராகவன் வெளியிட்ட இந்த திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில் மோகன் ஜி இதற்கு முன் இயக்கிய திரெளபதி மற்றும் ருத்ர தாண்டவம் ஆகிய இரண்டு படங்களும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
அவரது படத்தில் நடித்து செல்வராகவனும் சர்ச்சையில் சிக்க வேண்டாம் என்ற அக்கறையுடன், அவரது ரசிகர்கள் பலர் டுவிட்டரில் அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர். சிலர் மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யா சொல்வது போல் ‘வேணாம் தலைவரே... வேணாம்’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.
சிலரோ செல்வராகவன் சொன்ன அறிவுரையை அவருக்கே கூறி வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் செல்வராகவன், டுவிட்டரில், “தயவு செய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டு விட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒன்று பிரச்சனையே இருக்காது இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள்” என பதிவிட்டிருந்தார். தற்போது இந்த டுவிட்டை பகிர்ந்து இது உங்களுக்கே பொருந்தும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.