பிரபல பாடகர் மற்றும் குணச்சித்திர நடிகர் மாணிக்க விநாயகம் இன்று மாரடைப்பால் காலமானார்.
எண்ணற்ற தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராக பணியாற்றியுள்ளார் மாணிக்க விநாயகம். தில், திருடா திருடி போன்ற பல படங்களில் நடிகராக நடித்துள்ளார். பொம்பளைங்க காதலைதான் நம்பிவிடாதே” என்ற பாடல் மூலமாக 2002ஆண்டளவில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக பேசப்பட்டார் மாணிக்க விநாயகம்.

மாணிக்க விநாயத்தின் தந்தை வழுவூர் பி.ராமைய்யா பிள்ளையும் ஒரு நாட்டிய கலைஞர். மாணிக்க விநாயகத்தின் மாமாவும், இசை குழுவுமான சி.எஸ்.ஜெயராமனும் பிரபலமான ஒரு பாடகர் ஆவார். 2003 ம் ஆண்டு தனுஷ் நடித்த திருடா திருடி படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். பல படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து, ரசிகர்களை கவர்தவர் மாணிக்க விநாயகம்.

பேரழகன், கிரி, திமிரு, சந்தோஷ் சுப்ரமணியம், தோழி, வேட்டைக்காரன், பலே பாண்டியா, யுத்தம் செய் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக 2017 ல் எண்பத்தி எட்டு படத்தில் நடித்தார் மாணிக்க விநாயகம். மாணிக்க விநாயகம் இதுவரை பல்வேறு தென்னிந்திய மொழிகளில் கிட்டதட்ட 800 பாடல்களை பாடி உள்ளார்.

இது தவிர பக்தி பாடல்கள், கிராமியப்பாடல்கள் என 15,000 க்கும் அதிகமான பாடல்களை மாணிக்க விநாயகம் பாடி உள்ளார்.78 வயதான பாடகர் மாணிக்க விநாயகம் மாரடைப்பால் சென்னையில் இன்று தனது இல்லத்தில் காலமானார். மாணிக்க விநாயகத்தின் மறைவிற்கு திரையுலகினர், ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
