காந்தா திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட துல்கர் சல்மான், தனக்கு தமிழ் மொழி மிகவும் பிடிக்கும் என பேசி இருக்கிறார்.

Dulquer Salmaan Loves Tamil Language : ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி மற்றும் ஜோம் வர்கீஸ் ஆகியார் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘காந்தா’. செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் துல்கர் சல்மான் உடன் சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ போஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படம் நவம்பர் 14ந் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் துல்கர் சல்மான் என்ன பேசினார் என்பதை பார்க்கலாம்.

அவர் பேசியதாவது : “எனக்கு தமிழ் மொழி ரொம்ப புடிக்கும். ஸ்கூலில் எனக்கு 3வது மொழி தமிழ். நான் படிச்சது எல்லாம் தமிழில் தான். மலையாள இயக்குனர்கள் கூட என்னைப் பார்க்கும்போது, சார் நீங்க மலையாளத்தைவிட தமிழ் தான் நல்லா பேசுறீங்கனு சொல்லுவாங்க. அந்த அளவுக்கு அந்த மொழி என்னுள் ஒரு அங்கமாக இருக்கிறது.

காந்தா திரைப்படம்

காந்தா படத்தின் கதையை 2019ம் ஆண்டு கேட்டேன். கண்டிப்பா சொல்றேன் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இயக்குநர் செல்வா இருப்பார். சினிமாவை அவர் அவ்வளவு ரசிப்பார். இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசையோடு காத்திருந்தேன். எங்கள் எல்லோருக்கும் தமிழில் மிக முக்கியமான படமாக ‘காந்தா’ இருக்கும் என நம்புகிறேன். ‘அய்யா’ கதாபாத்திரத்திற்கு மிகப்பொருத்தமான நபராக சமுத்திரக்கனி அவர்கள் இருந்தார்.

எங்களை விட இன்னும் அதிக ஆர்வமாக சமுத்திரக்கனி இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார். அவருடன் இணைந்து இன்னும் நிறைய படங்கள் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். குமாரி கதாபாத்திரத்திற்காக தமிழ் கற்றுக் கொண்டு முழு ஈடுபாட்டோடு பாக்கியஸ்ரீ நடித்து இருக்கிறார். ராணாவும் நானும் இணைந்து இந்தப் படம் செய்திருப்பது ரொம்ப மகிழ்ச்சி. படம் நன்றாக வர வேண்டும் என்று ராணா முழு உழைப்பைக் கொடுத்துள்ளார்.

டைம் டிராவல் செய்வது போன்ற மகிழ்ச்சியை இந்த பீரியட் படங்கள் நமக்கு கொடுக்கும். அதை கலை இயக்குநர் ராமலிங்கம் சிறப்பாக செய்துள்ளார். மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்தப் படத்திற்காக சிறப்பாக உழைத்துள்ளனர். படம் பார்க்கும் அனைவருக்கும் இது மறக்க முடியாத படமாக இருக்கும் என நம்புகிறேன். நவம்பர் 14ந் தேதி அன்று படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.