கொரோனாவால் ‘வாணி ராணி’ சீரியல் பிரபலம் மரணம்... அடுத்தடுத்த இழப்பால் திரையுலகம் அதிர்ச்சி...!
தமிழ் சினிமாவில் பழம் பெரும் நடிகரான ஜோக்கர் துளசி கொரோனா தொற்றால் மரணமடைந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவையே அலைக்கழித்து வரும் கொரோனா 2வது அலைக்கு பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த முறை எஸ்.பி.பாலசுப்ரமணியம் உள்ளிட்ட திரையுலக ஜாம்பாவன்கள் கொரோனா தொற்றுக்கு பலியாகினர். அதேபோல் இந்த முறையும் தமிழில் தலைசிறந்த கேமராமேனாகவும், வெற்றிப் பட இயக்குநராகவும் வலம் வந்த கே.வி.ஆனந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றுக்கு பலியானார்.
நான்கு நாட்களுக்கு முன்பு தமிழ் திரையுலகின் பிரபல காமெடி நடிகரும், அதிமுக கொடியை வடிவமைத்தவருமான நடிகர் பாண்டு கொரோனா தொற்றால் மரணமடைந்தார். அன்றைய தினமே ஆட்டோகிராப் படத்தில் ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடலில் நடித்த கோமகன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இந்நிலையில் தமிழ் சினிமாவில் பழம் பெரும் நடிகரான ஜோக்கர் துளசி கொரோனா தொற்றால் மரணமடைந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் மருதுபாண்டி என்ற படத்தின் மூலமாக 1990இல் திரையுலகில் அறிமுகமானவர் ஜோக்கர் துளசி. அதன் பின்னர் உடன்பிறப்பு, தமிழச்சி, அவதாரபுருஷன் ஆகிய படங்களில் தன்னுடைய நடிப்பால் தனி கவனம் ஈர்த்தவர். சின்னத்திரையில் கோலங்கள், வாணி ராணி, கேளடி கண்மணி உள்ளிட்ட சன் டிவி சீரியல்களில் நடித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜோக்கர் துளசி, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு வெள்ளித்திரை, சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.