23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை என்றும் தனக்கு நண்பர்களே கிடையாது எனவும் செல்வராகவன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை படம் மூலம் தனது பயணத்தை தொடங்கியவர் செல்வராகவன். இதையடுத்து காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி வெற்றி கண்ட செல்வராகவன், தற்போது நடிகராகவும் கலக்கி வருகிறார். இவர் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் மூலம் நடிகராக களமிறங்கினார்.
இதையடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கிய சாணிக்காயிதம் திரைப்படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். பின்னர் நானே வருவேன் படத்தில் நடித்த செல்வராகவன், சமீபத்தில் மோகன் ஜி இயக்கிய பகாசூரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்து வருகின்றன. இப்படி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் செல்வராகவன், கைவசம் நிறைய படங்களையும் வைத்திருக்கிறார்.
இதையும் படியுங்கள்... தமிழ்நாட்டின் முதல் சூப்பர்ஸ்டார் நடிகரின் வாழ்க்கையை படமாக்க துடிக்கும் பார்த்திபன்

இவரும் தனுஷும் இணைந்து புதுப்பேட்டை 2 மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 போன்ற படங்களில் இணைந்து பணியாற்ற திட்டமிட்டு இருக்கிறார். ஆயிரத்தில் ஒருவன் 2 குறித்த அறிவிப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகிவிட்டாலும், இன்னும் அதுகுறித்த அடுத்தகட்ட அப்டேட் வெளியாகவில்லை. இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் போட்டுள்ள டுவிட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் “அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் உள்ளது.. எங்கு போய் நட்பை தேடுவேன்” என குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், உங்களுக்கு நாங்க இருக்கோம் என நட்புக்கரம் நீட்டி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... தந்தையுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் மும்பையில் குடியேறினாரா சூர்யா? - புது குண்டை தூக்கிப்போட்ட பிரபலம்
