சமத்துவம் போற்றும் தமிழகத்தில் வரம்பு மீறிவிட்டாய்... மீரா மிதுனை வெளுத்து வாங்கிய பிரபல இயக்குநர்!
மீரா மிதுனை ஏன் இதுவரை கைது செய்யவில்லை முதலமைச்சர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு ட்வீட் செய்திருந்த இயக்குநர் நவீன்
சோசியல் மீடியாவில் பப்ளிசிட்டி தேடுவதற்காக சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு வருபர் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதில் ஆரம்பித்து என் மூஞ்சியை எல்லா நடிகைகளும் திருடிட்டாங்க என பீதி கிளப்பியது வரை மீரா மிதுனின் பப்ளிசிட்டி அலப்பறைகள் அளவில்லாதது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய யூ-டியூப் பக்கத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களை மிகவும் அவதூறாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசி மீரா மிதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி தமிழகத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
இதுகுறித்த புகார்களின் அடிப்படையில் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் புகார்கள் பதிவு செய்யப்பட்டன. கைது நடவடிக்கை பாயும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், என்னை கைது செய்வது கனவிலும் நடக்காது என காவல்துறைக்கே சவால் விட்டார். அதன் பின்னர் மீரா மிதுன் விசாரணைக்கு ஆஜராகாமல், சைபர் க்ரைம் போலீசாரின் சம்மனையும் புறக்கணித்தார்.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் பதுங்கியிருந்த மீரா மிதுனை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். அப்போது கூட தன்னுடைய யூ-டியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்ட மீரா மிதுன், என்னை இவனுங்க எல்லாம் டார்ச்சர் பண்றாங்க என காவல்துறையினரை தரக்குறைவாக பேசியது அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது.
இந்நிலையில் மீரா மிதுனை ஏன் இதுவரை கைது செய்யவில்லை முதலமைச்சர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு ட்வீட் செய்திருந்த இயக்குநர் நவீன் மேலும் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அதில், U’v never been famous, but notorious always. இதுவரை உங்கள பித்துப் பிதற்றல்களை நகைத்தபடி கடந்து சென்றோம். ஆனால் இம்முறை நீங்கள் வரம்பு மீறிவிட்டீர். உங்கள் கைது சாதிய வசைபாடும் பலருக்கு ஒரு அச்சத்தை தரும். இது சமத்துவம் போற்றும் தமிழகம்!
நன்றி என குறிப்பிட்டுள்ளார்.