பாதுகாப்புக்கு வந்த போலீசை அரெஸ்ட் பண்ண வந்ததாக புரளியைக் கிளப்பிய சன் பிக்சர்ஸ் … நள்ளிரவில் ஏற்பட்ட பதற்றம்…
சர்கார் திரைப்படத்தில் அதிமுக அரசுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருவதால் அந்தப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்,முருகதாஸ் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனால் அவரை கைது செய்வதற்காக போலீஸ் வந்துள்ளது என சன் பிக்சர்ஸ் டுவிட்டரில் பதிவு செய்து புரளியைக் கிளப்பிவிட்டது.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் சர்கார் திரைப்படத்தில் அரசியல் தொடர்பான கருத்துகளும், காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் ஆளும் அதிமுக அரசை தாக்குவதுபோல் அமைந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகளை நீக்குமாறும், இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், சர்கார் படத்துக்கு என வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் சர்கார் படத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சர்கார் படத்தின் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் வீட்டுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக நேற்று இரவு 10 மணிக்கு முருகதாஸ் வீட்டுக்கு போலீஸ் சென்றது. அவர் இருக்கிறா ? என கேட்ட போலீஸ் பின்னர் அவருக்கு பாதுகாப்பு அளித்தனர்.
ஆனால் முருகதாஸ் வீட்டுக்கு போலீஸ் சென்றவுடன். அவரை கைது செய்வதற்காக போலீஸ் சென்றுள்ளது என சன் பிக்சர்ஸ் டுவீட் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு விஜய் ரசிகர்களும், முருகதாஸ் ரசிகர்களும் குவிந்தனர்.
இயக்குநர் விக்கிரமன் உள்ளிட்ட சில இயக்குநர்களும் சென்று பாதுகாப்புக்காக போலீஸ் வந்துள்ளது என தெரிந்துகொண்டபின் அவர்கள் திரும்பினர்