வரலாறு காணாத பேரிடர்!! கையெடுத்து கும்பிட்டு முதல்வருக்கு கோரிக்கை வைத்த இயக்குனர் மாரி செல்வராஜ்!
தமிழகத்தின் தென் பகுதிகளில் வரலாறு காணாத மழை கொட்டி தீர்த்து வரும் நிலையில்... இயக்குனர் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதல்வருக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இடைவிடாது கன மழை பெய்து வருகிறது. இதை தொடர்ந்து, மாநகராட்சி காவல்துறை தீயணைப்பு துறை உள்ளிட்டோர் இணைந்து மக்களை மழை வெள்ளத்தில் இருந்து மீட்கும் பேரிடர் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மிக குறுகிய நேரத்தில், இந்த நான்கு மாவட்டங்களுக்கும் குறுகிய நேரத்தில் நிவாரணம் வழங்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் போட் மூலம் மீட்கப்பட்டு வருவதோடு பத்திரமாக... முகாம்களில் தக்கவைக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இயக்குனர் மாரி செல்வராஜ் நெல்லை மக்களை மழை வெள்ளத்தில் இருந்து மீட்க வேண்டும் என போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
இந்த பதிவில் "வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் அவ்வளவு கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது. மீட்பு வாகனங்களால் படகுகளால் எதிலும் உள்ளே செல்ல முடியவில்லை . வெள்ளத்தின் வேகம் அப்படியிருக்கிறது. ஆதிநாதபுரம், செம்பூர், கரையடியூர் , பிள்ளமடையூர், மாநாட்டூர், கல்லாம்பறை, தேமான்குளம், மணத்தி, இராஜபதி, குருவாட்டூர், குரும்பூர் ,குட்டக்கரை, தென்திருப்பேரை மேலகடம்பா, இப்படி இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை. இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றிற்கும் குளத்திற்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள், இதை கருத்தில்கொண்டு எதன் வழியாவது மீட்புபணிகளை மிக துரிதமாக மேற்கொள்ள வேண்டுகிறேன். என முதல்வர் ஸ்டாலினை கை கூப்பி கேட்டுள்ளார். இவரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.