எஸ்.பி.பி.க்காக பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி... இயக்குநர் பாரதிராஜா உருக்கமான நன்றி...!
இந்நிலையில் கூட்டு பிரார்த்தனையில் பங்கேற்றவர்களுக்கு நன்றி தெரிவித்து இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 5ம் தேதி சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 14ம் தேதி உடல் நிலை கவலைக்கிடமானது. இதையடுத்து இரு தினங்களுக்கு முன்பு இயக்குநர் பாரதிராஜா கூட்டு பிரார்த்தனை ஒன்றிற்கு அழைப்பு விடுத்திருந்தார். அதில் திரைப்திரையுலகினர், இசைப்பிரபலங்கள் மற்றும் இசைப்பிரியர்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டு பிரார்த்தனை நடத்தினர்.
சரியாக 6 மணிக்கு தங்களது வீடுகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடல்களை ஒளிக்கவிட்டு, இறைவனிடம் அவர் உடல் நலம் பெற வேண்டுமென வேண்டிக்கொண்டனர்.தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.பி.பி. ரசிகர்களும், குறிப்பாக ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்களும் வீதிகளில் மெழுகுவர்த்தி ஏந்தி எஸ்.பி.பாலசுப்ரமணியம் நலமடைய வேண்டுமென பிரார்த்தனை செய்தனர். ஒட்டுமொத்த தமிழகமும் எஸ்.பி.பி. மீண்டு வர வேண்டுமென பிரார்த்தனை செய்தது.
இந்நிலையில் கூட்டு பிரார்த்தனையில் பங்கேற்றவர்களுக்கு நன்றி தெரிவித்து இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். என் இனிய தமிழ் மக்களே.. பாடும் நிலா எஸ்.பி. பாலு உடல்நலம் முன்னேற்றம் அடைந்து பூரண நலம் பெற உலகெங்கும் நடைப்பெற்ற கூட்டுப் பிரார்த்தனைக்கு உறுதுணையாக இருந்து, பிரார்த்தனையில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மாண்புமிகு திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், தமிழக அமைச்சர் பெரு மக்கள், எதிர்க் கட்சித் தலைவர் திரு.ஸ்டாலின் அவர்கள், மத்திய அமைச்சர் ஹர்சவர்தன், புதுவை முதல்வர் மாண்புமிகு திரு. நாராயணசாமி அவர்கள் மற்றம் தமிழக அரசியல் கட்சி பெருமக்கள் எங்கள் கலைத்துறையில் நண்பர்கள் இளையராஜா, ரஜினிகாந்த், சிவக்குமார், எஸ்.ஏ.சந்திரசேகர், கலைப்புலி தாணு, பாக்யராஜ், பாடகர்கள் மனோ, ஜானகி, சித்ரா உள்ளிட்ட பலரது பெயரையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர்கள் திரு. சங்கர் கணேஷ் திரு. தேவா, திரு.தினா, திரு.இமான், திரு ஜி.வி.பிரகாஷ், திரு. ஸ்ரீகாந்த் தேவா திரு என்.ஆர் ரகு நந்தன், கவிஞர் கார்க்கி, கவிஞர் கபிலன் வைரமுத்து மற்றும் திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், பெப்சி நிர்வாகிகள், தொழில் நுட்பக் கலைஞர்கள், இசை அமைப்பாளர் சங்கம், திரையங்க அதிபர்கள், விநியோகஸ்தர்கள், ரஜினி மக்கள் மன்றம், நாம் தமிழர் கட்சி உறவுகள், விஜய் ரசிகர் மன்றம், தனுஷ் ரசிகர் மன்றம், சூர்யா & கார்த்தி ரசிகர் மன்றங்கள், சிம்பு ரசிகர் மன்றங்கள் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள், ஊடகத்துறை நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அனைவரும் சமூக இடைவெளியுடன் பிரார்த்தனையில் கலந்து கொண்டது நெகிழ்ச்சியாக இருந்தது. எஸ்.பி.பி அவர்களும், பொதுமக்களும் கொரோனா பிடியில் இருந்து மீண்டுவர தொடர்ந்து பிரார்த்திப்போம். பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள். அரசு வழிகாட்டுதலின்படி அனைவரும் வெளியில் செல்லும் போது முககவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் என கேட்டுக் கொள்கிறேன் ..... என குறிப்பிட்டுள்ளார்.