இயக்குநர் பாலசந்தரின் மனைவி மரணம்…. உடல்நலக்குறைவால் காலமானார் !!
மறைந்த இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மனைவி ராஜம் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 84.
இயக்குநர் சிகரம் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் கைலாசம் பாலச்சந்தர் என்கிற கே. பாலச்சந்தர்.
இவர் மேடை நாடகத்து துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். திரைத்துறையில் 1965ம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி இவரது முதல் இயக்கமாகும். நடிகர் நாகேஷ் இதில் கதாநாயகனாக நடித்தார். இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின. அபூர்வ ராகங்கள், புன்னகை மன்னன், எதிர்நீச்சல், வறுமையின் நிறம் சிகப்பு, உன்னால் முடியும் தம்பி முதலியன இவர் இயக்கிய சிறந்த படங்களில் சிலவாகும்.
தமிழ்த் திரையுலகின் முக்கிய நடிகர்களான கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியயோரை அறிமுகம் செய்தவர். 90களுக்குப் பிறகு கையளவு மனசு போன்ற பெரும் வரவேற்பை பெற்ற தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கினார். பாலசந்தர் கடந்த 2104 டிசம்பரில் காலமானார்.
இவரது மனைவி ராஜம் இவர் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவுடன் இருந்துள்ளார். இந்த நிலையில், சென்னையில் இன்று அதிகாலை அவர் 4.30 மணியளவில் காலமானார்.
இவருக்கு புஷ்பா கந்தசாமி என்ற மகளும், பிரசன்னா என்ற மகனும் உள்ளனர்.