dhoni movie second part will shoot soon

தோனி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளதால் தோனியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்திய அணிக்கு மூன்று விதமான சாம்பியன்ஷிப்பையும் வென்று கொடுத்தவர். இந்திய கிரிக்கெட்டின் அசைக்க முடியாத சக்தியாக திகழ்கிறார். மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட தோனியின் வாழ்க்கை, படமாக்கப்பட்டு கடந்த 2016ம் ஆண்டு வெளியானது. 

தோனி - தி அண்டோல்ட் ஸ்டோரி என்ற பெயரில் வெளியான இந்த படத்தில் தோனியின் கதாபாத்திரத்தை சுஷந்த் சிங் ஏற்று நடித்திருந்தார். தோனியின் உடல் மொழியை அப்படியே திரையில் வெளிப்படுத்தியிருந்தார். 

அந்த படத்தில் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு அவரை பற்றி தெரியாத தனிப்பட்ட விஷயங்களும் படமாக்கப்பட்டிருந்தன. அவரது குழந்தைப் பருவம், குடும்ப வாழ்க்கை, பெற்றோர் மற்றும் அக்காவுடனான உறவு, அவரது காதல், திருமணம் என அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பதிவுகளும் இடம்பெற்றிருந்தன. 

தோனி இந்திய அணியில் நுழைய பட்ட கஷ்டம், அணிக்குள் வந்த பிறகு தன்னை தக்கவைத்துக்கொண்ட விதம், அவரது திறமை, அவரது உள்ளுணர்வு என தோனியின் அனைத்து பரிமாணங்களையும் அந்த படம் பேசியிருந்தது.

தோனியின் குழந்தை பருவம் முதல் 2011 உலக கோப்பையை வென்றதுவரை அந்த படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், தோனி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2011 உலக கோப்பைக்குப் பிறகான அவரது வாழ்க்கை படமாக்கப்பட உள்ளது. 

இரண்டாம் பாகத்தில் அவரது மகள் ஸிவா தோனி - தோனிக்கு இடையேயான பாசப்பிணைப்பு முக்கிய பங்காற்றும் என கூறப்படுகிறது. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தது உள்ளிட்ட காட்சிகளும் இடம்பெறும். முதல் பாகத்தில் தோனி கதாபாத்திரத்தில் நடித்த சுஷந்த் சிங் தான் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார். ஆனால் இயக்குநர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. 

மேலும் அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்க உள்ள உலக கோப்பையுடன் தோனி ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அதன்பிறகு இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த தகவலால் தோனியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.