தனுஷ் - செல்வராகவன் படத்தின் டைட்டில் மாற்றப்படுகிறதா?
நடிகர் தனுஷ், நீண்ட இடைவெளிக்கு பின் தன்னுடைய சகோதரர் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க உள்ள 'நானே வருவேன்' படத்தின் டைட்டில் மற்றும், கதையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ், நீண்ட இடைவெளிக்கு பின் தன்னுடைய சகோதரர் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க உள்ள 'நானே வருவேன்' படத்தின் டைட்டில் மற்றும், கதையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் செல்வராகவன், தனுஷ், கூட்டணி என்றாலே பலருக்கும் எதிர்பார்ப்புகள் எகிறிவிடும், இவர்களுடன் யுவன் சங்கர் ராஜாவும் இருக்கிறார் என்றால் திரையில் பட்டையைக் கிளப்பும் ட்ரீட் கன்பார்ம் என்பது ரசிகர்களுக்கு நன்றாக தெரியும். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், என்.ஜி.கே வரை செல்வராகவன் - யுவன் சங்கர் ராஜா கூட்டணி தொட்டதெல்லாம் ஹிட்டு தான். தற்போது அந்த கூட்டணி 8வது முறையாக ஒன்றிணைந்துள்ளது.
'கர்ணன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, கலைப்புலி எஸ்.தாணு செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் உருவாகும் 'நானே வருவேன்' என படத்தை தயாரிக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அண்மையில் வெளியான நிலையில், தற்போது இந்த படத்தின் கதையில் சில மாற்றங்களை செய்ததோடு, படத்தின் தலைப்பையும் படக்குழு மாற்றியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
அதன்படி, இந்த படத்திற்கு 'ராயன்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும், 3 சகோதரர்களை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட உள்ளதாம். ராயபுரத்தில் வசிக்கும் அண்ணன் - தம்பிகளில் ஒருவராக தனுஷ் நடிக்க உள்ளதாகவும், இதில் மற்றொரு ஹீரோவாக நடிக்க விஷ்ணு விஷாலிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த அதிகார பூர்வ தகவல் இதுவரை வெளியாகாத நிலையில், திடீர் என கதை மற்றும் டைட்டில் மாற்றப்பட்டுள்ளதால், ஆகஸ்ட் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலும் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விரைவில் படக்குழுவிடம் இருந்து உரிய தகவல் வெளியாகும் அது வரை கார்த்திருப்போம்.