'காலா' படத்திற்காக நீதி மன்றத்தை நாடிய தனுஷ்...!
ரஜினி நடித்துள்ள 'காலா' திரைப்படம் ஜூன் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது. ஆனால் இந்த படத்திற்கு கர்நாடகா மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் ரஜினி சொன்ன கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தடை போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக கொண்டு சென்றுள்ளார் நடிகரும் 'காலா' படத்தின் தயாரிப்பாளருமான தனுஷ். கர்நாடகாவில் 'காலா' படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்டோர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவில் 'காலா' படத்தை கர்நாடகாவில் திரையிடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க அம்மாநில உள்துறை செயலாளர், காவல்துறை தலைவர், பெங்களூர் காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தனுஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.