பரதன் இல்லை, கவுதமி இல்லை… ஆனாலும் ‘தேவர் மகன்2’ உண்டு’... கமல் உடைக்கும் உண்மைகள்!
’வரும் பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிடுவதில்லை. பி.ஜே.பி., காங்கிரஸ் ஆகிய இரண்டில் எது சரிப்பட்டு வருகிறதோ அதனுடன் கூட்டணி என்ற பக்குவத்தில் அரசியலில் மெல்ல வயசுக்கு வந்துகொண்டிருக்கிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்.
’வரும் பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிடுவதில்லை. பி.ஜே.பி., காங்கிரஸ் ஆகிய இரண்டில் எது சரிப்பட்டு வருகிறதோ அதனுடன் கூட்டணி என்ற பக்குவத்தில் அரசியலில் மெல்ல வயசுக்கு வந்துகொண்டிருக்கிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல். நேற்று சேலத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக, பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் அவரது இந்த நிலைப்பாடு தெளிவாக வெளிப்பட்டது.
அந்நிகழ்ச்சியில் கமல் வெளியிட்ட சில கருத்துக்கள் வருமாறு; தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் அரசியலில் இருந்தே அகற்றுவதற்கு என்னவெல்லாம் பாடுபடவேண்டுமோ அதை மக்கள் நீதி மய்யம் செய்யும். வரும் பாராளுமன்றத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமையும் சாத்தியம் குறைந்துகொண்டே வருகிறது. அப்படி அந்தக் கூட்டணி அமையாத பட்சத்தில் நாங்கள் காங்கிரஸுடன் கூட்டணி அமைப்போம்.
ஆனால் திமுகவுடன் கூட்டணி என்கிற ஒரு தவறை எந்தக் காலத்திலும் செய்யவே மாட்டோம். சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதில் எந்தத் தவறும் இல்லை. அப்படி அனுமதிப்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும்.
சினிமாவில் எனக்கு இப்போதைக்கு உறுதியாக இருக்கும் படம் ஷங்கருடன் மீண்டும் இணையும் ‘இந்தியன்2’. ஆனால் ‘தேவர் மகன் 2’ எடுக்கப்படவேண்டும் என்று மக்கள் பெரும் ஆர்வமாக இருப்பதால், அதையும் அடுத்த ஆண்டு துவங்கும் ஆசை இருக்கிறது.ஆனால் அப்படத்தை எப்போது தொடங்கி எப்போது முடிப்பீர்கள் என்று கேட்டால் என்னிடம் இப்போது பதில் இல்லை’ என்றார் கமல்.
‘தேவர் மகன்’ படத்தை இயக்கிய பரதன் சிலவருடங்களுக்கு முன் காலமாகிவிட்டதால் இம்முறை இரண்டாம் பாகத்தை கமலே இயக்கும் முடிவில் இருப்பதாகத் தெரிகிறது. அதே போல் முதல் பாக நாயகி கருத்து வேறுபாடுகளுடன் கமலை விட்டு தப்பி ஓடிவிட்டதால் கமலின் லேட்டஸ்ட் டார்லின் யாராவது ஒருவர் கவுதமியின் இடத்துக்கு கமிட் பண்ணப்படுவார்’ என்று மய்யமாக நம்பப்படுகிறது.