Conjuring Kannappan : நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியான கான்ஜுரிங் கண்ணப்பன் திரைப்படம் 25 நாட்கள் ஓடி மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்ற திரைப்படம் தான் "காஞ்சூரிங் கண்ணப்பன்". இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் சதீஷ் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்க, ஆனந்தராஜ், சரண்யா பொன்வண்ணன் மற்றும் ரெஜினா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
ஏஜிஎஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டுள்ள நிலையில், இளைய இசைஞானி யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். கடந்த ஆண்டு இறுதியில் வெளியான வெகு சில படங்களில் நல்ல விமர்சனத்தையும், வசூலையும் பெற்ற திரைப்படங்களில் ஒன்றாக மாறியது கான்ஜுரிங்
கண்ணப்பன்.
குறிப்பாக நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படத்தை ஒப்பிடும் பொழுது சதீஷின் இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்நிலையில் இந்த திரைப்படம் 25 நாட்களை கடந்து 50க்கும் அதிகமான திரையரங்குகளில் ஓடி வருவதை முன்னிட்டு திருப்பூரில் உள்ள ஒரு திரையரங்கம் வெற்றி விழா ஒன்றை ஏற்பாடு செய்தது.
அதில் பங்கேற்று ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்த நடிகர் சதீஷ் இந்த காலகட்டத்தில் ஒரு திரைப்படம் 25 நாட்கள் ஓடுவது என்பது மிகவும் அரிதாக மாறிவிட்டது. இது நூறாவது நாளை போல மிகவும் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது என்று கூறினார். மேலும் நம்மை விட்டு மறைந்துவிட்ட நடிகர் விஜயகாந்த் அவர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி நாம் அனைவரும் செலுத்தினால் அது நன்றாக இருக்கும் என்று கூறி அதன் பிறகு பேச துவங்கினார் சதீஷ்.
அப்போது "நடிகர் சங்கத்திற்கு விஜயகாந்த் அவர்கள் பல நன்மைகளை செய்திருக்கிறார், அவரை பெருமை படுத்துவது தான் நடிகர் சங்கத்திற்கு பெருமை" என்று அவர் கூறியுள்ளார். தற்பொழுது கட்டி முடிக்கப்பட உள்ள நடிகர் சங்கத்திற்கு மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய பெயரை வைக்க வேண்டும் என்று தேமுதிக கட்சியினரும் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய ரசிகர்களும் விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
