பாக்யலட்சுமி சீரியலில் இடம்பெறும் சர்ச்சைக்குரிய காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் அத்தொடரின் இயக்குனர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

கடந்த சில மாதங்களாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாக்கியலட்சுமி என்கிற மெகா தொடரில் ஆசிரியரால் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுப்பது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதில் அந்தப் பள்ளியின் மாணவி மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறார் இதுபோன்ற காட்சிகள் தொலைக்காட்சியில் வெளியாகுவது மிகவும் கண்டனத்துக்குரியது, என சமூக ஆர்வலர் முகமது கோஷ் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளார். 

அந்த புகாரில் இதுபோன்ற காட்சியை உடனடியாக நீக்க வேண்டும், விஜய் டிவி மீதும், பாக்கியலட்சுமி மெகா தொடரின் இயக்குனர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். 

மேலும் தமிழக அரசு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் வன்கொடுமை தொடர்பாக புகார் செய்யவேண்டிய எண்களை வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் இது போன்ற காட்சி மற்ற மாணவிகளையும் தற்கொலை செய்யத் தூண்டுவதாக அமைந்துள்ளது. ஆகவே இவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆணையர் அலுவலகம், ட்ராய் மற்றும் ஒன்றிய ஒளிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு புகார் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.