விஜய் சேதுபதியால் கலாநிதி மாறனுக்கு வந்த சிக்கல்
இந்து கடவுள்களை அவமதிக்கும் விதமாகவும் கோவில்களில் நடக்கும் அபிஷேக முறைகளை கிண்டலடிக்கும் விதமாக விஜய் சேதுபதி பேசிய விவகாரத்தில் தமிழ்நாடு முழுவதும் அவர் மீது காவல்துறையில் புகாரளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாதையை தேர்ந்தெடுத்து, தனக்கே உரித்தான பிரத்யேக ஸ்டைலில் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நல்ல திரைப்படங்களில் நடித்து, நல்ல பெயரை சம்பாதித்து வந்த விஜய் சேதுபதி, ஒரேயொரு சர்ச்சை கருத்தை கூறி இந்து மக்களின் எதிர்ப்பை சம்பாதித்திருக்கிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் நம்ம ஊரு ஹீரோ என்ற நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கிவருகிறார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 17ம் தேதி ஒளிபரப்பான பகுதியில், கோவில்களில் கடவுள் குளிப்பதையெல்லாம் பக்தர்களுக்கு காட்டுகிறார்கள். ஆனால் உடைமாற்றுவதை மட்டும் காட்டுவதில்லை. குளிப்பதையே காட்டும்போது உடை மாற்றுவதையும் காட்டலாமே என இந்து கடவுள்களை அவமதிக்கும் விதமாகவும் இந்து கோவில்களில் பூஜை முறைகளை கிண்டலடிக்கும் விதமாகவும் கருத்து தெரிவித்தார்.
விஜய் சேதுபதியின் இந்த சர்ச்சை கருத்து, இந்து மக்களின் மனதை புண்படுத்தியுள்ளது. இதையடுத்து விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு முழுவதும் பல காவல் நிலையங்களில் இந்து அமைப்பினர் புகார் அளித்துவருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் விஜய் சேதுபதி மீது மட்டுமல்லாது, அவரது அதிகப்பிரசங்கித்தனமான பேச்சை ஒளிபரப்பிய சன் டிவியின் நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநெல்வேலி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
குற்றாலநாதன் என்பவர், திருநெல்வேலி காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரில், இந்துக்கள் மனம் புண்படும்படி பேசிய விஜய் சேதுபதியின் மீதும் அதை ஒளிபரப்பிய சன் டிவி நிர்வாக இயக்குநர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குற்றாலநாதன் புகாரளித்துள்ளார்.