வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பிரபல நடிகராக வலம் வரும் வேணு அரவிந்த் கோமாவில் உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், சக நடிகர் வெளியிட்டுள்ள காணொலி உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. 


‘அலைகள்’, ‘செல்வி’, ‘வாணி ராணி’, ‘அரசி’, ‘சந்திரகுமாரி’ உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட சின்னத்திரை தொடர்களிலும், இயக்குநர் கே.பாலச்சந்தரின் பல்வேறு தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமானவர் வேணு அரவிந்த். வெள்ளித்திரையில் நரசிம்மா, அலைபாயுதே உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தற்போது இவர் அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கோமா ஸ்டேஜில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி இவரது ரசிகர்களையும், சின்னத்திரை வட்டாரத்தையும் சோகமடைய செய்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்ட இவர், பின்பு நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதன் பின்பு மூளையில் கட்டி உள்ளதாக மருத்துவர்கள் கூறியதை தொடர்ந்து , அதனை அறுவை சிகிச்சை செய்து அகற்றியிருக்கிறார்கள். சில மாதங்களாக வேணு அரவிந்த சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகின. 


இந்நிலையில் வாணி ராணி சீரியலில் வேணு அரவிந்திற்கு மகனாக நடித்த அருண் குமார் ராஜன், அவருடைய மனைவியை சந்தித்தது குறித்தும், வேணு அரவிந்தின் உடல் நிலை குறித்தும் பரபரப்பு தகவல்களை தன்னுடைய வீடியோவில் வெளியிட்டுள்ளார். அதில், “பல தவறான செய்திகள் பரவி வருகின்றன. இப்போது தான் வேணு அரவிந்த் சார் உடைய மனைவியை சந்தித்தேன். ​அவர் கோமாவில் இல்லை. கடந்த 7-8 மாதங்களாகவே அவருடைய குடும்பத்தினர் பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகின்றனர். வேணு அரவிந்த் சார் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், கோமாவில் இல்லை. சிகிச்சைக்கு நன்றாக ஒத்துழைத்து வருகிறார். அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார். உங்களுடைய பிரார்த்தனைகளை தொடருங்கள். மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறேன் அவர் கோமாவில் இல்லை. தயவு செய்து வதந்திகளை பரப்பாதீர்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்.

View post on Instagram