செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் தற்போது ‘நானே வருவேன்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் படங்களுக்கு என மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. குறிப்பாக செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் உருவாகும் படங்களுக்கு தனி மவுசு என்றே சொல்லலாம். 

இயக்குனர் செல்வராகவன், தனுஷ், கூட்டணி என்றாலே பலருக்கும் எதிர்பார்ப்புகள் எகிறிவிடும், இவர்களுடன் யுவன் சங்கர் ராஜாவும் இருக்கிறார் என்றால் திரையில் பட்டையைக் கிளப்பும் ட்ரீட் கன்பார்ம் என்பது ரசிகர்களுக்கு நன்றாக தெரியும். 

இவர்கள் மூவரும் இணைந்து இதுவரை துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை போன்ற படங்களில் பணியாற்றி உள்ளனர். தற்போது அந்த கூட்டணி மீண்டும் ஒன்றிணைந்துள்ளது. இவர்கள் கூட்டணியில் தற்போது ‘நானே வருவேன்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்

இப்படத்திற்கு முதலில் அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்வதாக இருந்தது. பின்னர் அவர் விலகியதால், அவருக்கு பதில் சாணிக் காயிதம் படத்தின் ஒளிப்பதிவாளர் யாமினி ஒப்பந்தமானார். தற்போது நானே வருவேன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், யாமினியும் அப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து விளக்கமளித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “செல்வராகவனுடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது. நிறைய கற்றுக்கொண்டேன். சில தவிர்க்க முடியாத காரணங்களால் நானே வருவேன் படத்தில் இருந்து நான் விலகுகிறேன். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். உங்களது ஆதரவுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார். அடுத்தடுத்து 2 ஒளிப்பதிவாளர்கள் இப்படத்தில் இருந்து விலகி உள்ளதால் ரசிகர்கள் குழப்பமடைந்து உள்ளனர்.