பிரபல ஒளிப்பதிவாளர் பிரியன் மாரடைப்பால் காலமானார்!
கோலிவுட் திரையுலகில் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக அனைவராலும் அறியப்பட்டவர் ஒளிப்பதிவாளர் பிரியன்.
பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான, பாலு மகேந்திராவிடம் உதவியாளராக இருந்து பின் 1992 ஆம் ஆண்டு 'வா வா வசந்தமே' படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகம் கொடுத்தார்.
இவரை பிரபல இயக்குனர் ஹரியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் என்று கூட சொல்லலாம்... இதுவரை இயக்குனர் ஹரி இயக்கி வெளிவந்த சாமி, கோவில், அருள், ஐயா, ஆறு, தாமிரபரணி, வேல், மற்றும் சிங்கம் படத்தின் மூன்று பாகத்திற்கும் இவர் தான் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் இன்று மதியம் 3 : 30 மணியளவில் இவருக்கு திடீர் என மாரடைப்பு காரணமாக உயிர் பிரிந்ததாக இவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவருடைய மரணம் குறித்து அறிந்த பல பிரபலங்கள் இவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.