நாட்டை மட்டுமே நேசிக்கிறேன்... அரசாங்கத்தை அல்ல - சுதந்திர தின வாழ்த்து சொல்லி மோடி அரசை சாடிய பி.சி.ஸ்ரீராம்
PC Sreeram : பிரபல ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம், பதிவிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில், “நான் என் நாட்டை நேசிக்கிறேன். ஆனால் அரசாங்கத்தை அல்ல. ஜெய் ஹிந்த்” என குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் இன்று 75-வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று காலை தேசியக் கொடியை ஏற்றி உரை நிகழ்த்தினார். இதையடுத்து நடைபெற்ற கண்கவர் அணிவகுப்புகளையும் கண்டு ரசித்தார் மோடி. அதேபோல் ஒவ்வொரு மாநில முதல்வர்களும் அந்தந்த மாநிலங்களில் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடினர்.
இது நம் நாட்டின் 75-வது சுதந்திர தினம் என்பதால், அதனை சிறப்பாக கொண்டாடும் விதமாக நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளின் வெளியே தேசியக் கொடியை பறக்கவிடுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை ஏற்று ஏராளமான மக்களும், பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்களும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை பறக்க விட்டனர்.
இதையும் படியுங்கள்... ஹனி மூன் சென்ற இடத்தில் பிரச்சனையா? சோகமாக அமர்ந்திருக்கும் நயன்தாராவின் ஷாக்கிங் புகைப்படம்!
தமிழ்நாட்டில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய், ரஜினி ஆகியோரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை பறக்கவிட்டனர். அதேபோல் நடிகர்கள் சூரி, பார்த்திபன் ஆகியோரும் தங்களது இல்லங்களில் தேசியக் கொடியை பறக்கவிட்டு அதனை புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
இதுதவிர ஏராளமான திரையுலக பிரபலங்களும் சுதந்திர தின வாழ்த்துக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரபல ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம், பதிவிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில், “நான் என் நாட்டை நேசிக்கிறேன். ஆனால் அரசாங்கத்தை அல்ல. ஜெய் ஹிந்த்” என குறிப்பிட்டுள்ளார். மோடி அரசின் மீதான வெறுப்பை காட்டும் விதமாக அவர் போட்டு உள்ள இந்த பதிவு வைரல் ஆகி வருகிறது.
இதையும் படியுங்கள்... மருத்துவமனையில் நடிகர் விஜய்... பதறி ஓடிய வாரிசு படக்குழு - இணையத்தில் காட்டுத்தீ போல் பரவும் வீடியோ