தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான 'பிகில்' படம், தீபாவளி கொண்டாட்டமாக கடந்த 25ம் தேதி வெளியானது. இந்தப் படத்தின் சிறப்பு காட்சிக்காக பல வழியில் போராடி, ஒரு வழியாக தமிழக அரசிடம் அனுமதி வாங்கப்பட்டது. 

இதனால், முந்தைய நாள் இரவே பல இடங்களில் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. ஆனால் கிருஷ்ணகிரியில் 'பிகில்' படத்தின் சிறப்பு காட்சி திரையிட தாமதமானதால், நள்ளிரவில் திரையரங்கம் முன்பு கூடியிருந்த விஜய் ரசிகர்கள் அராஜகத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் இருந்த பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தி விஜய் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்ட வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வைரலானது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அராஜகத்தில் ஈடுபட்ட ரசிகர்களை கைது செய்து ஜெயலில் போட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், முதற்கட்டமாக, 32 பேரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில், கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 7 சிறுவர்கள் உள்பட மேலும் 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் 7 பேர் சிறார் சீர்திருத்த பள்ளிக்கும், மற்ற 11 பேர் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். 


யாரோ ஒரு நடிகரின் படத்தை பார்ப்பதற்காக, இப்படி ரகளை செய்து, தங்கள் பிள்ளைகள் சிறைக்கு செல்வதை பார்த்து பெற்றோர்கள் கண்ணீரும் கம்பலையுமாக நின்றிருந்தனர். சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு என்பதை மறந்து, ஒரு படத்துக்காக ரகளையில் ஈடுபட்டு, சிறைக்கு சென்று, தங்கள் வாழ்க்கையையும் வீணாக்கி, பெற்றோரையும் கலங்க வைப்பது நியாயமா? என்பதை இதுபோன்ற ரசிகர்கள் எப்போது உணர்வார்கள் என்பதே கேள்விக்குறிதான்.