BiggBoss 5 Tamil : பிரச்சனையை கிளறிய கமலிடம் உண்மையை சொன்ன தாமரை... கடுப்பான பிரியங்கா - மீண்டும் குறும்படமா?
கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், கடந்த வாரம் அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. தற்போது 5-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த 5 சீசன்களையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி உள்ளார். நிகழ்ச்சி நடைபெறும் 100 நாட்களில் ஒவ்வொரு வாரத்தின் இறுதி நாட்கள் மட்டும் கமல்ஹாசன் கலந்துகொள்வார்.
அந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் நடந்த போட்டிகள் மற்றும் சண்டைகள் குறித்து போட்டியாளர்களுடன் அகம் டிவி வழியே கலந்துரையாடுவார். இறுதியாக மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகள் பெற்ற நபரை அறிவிக்கும் பொறுப்பையும் கமல் மேற்கொண்டு வந்தார்.
சமீபத்தில் கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அவர் கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை. அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தற்போது அவர் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டதால், இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தான் தொகுத்து வழங்குகிறார். அவர் நிகழ்ச்சியில் பங்கேற்ற புரோமோவும் வெளியானது.
இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது புரோமோவில், நடிகர் கமல்ஹாசன் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நடந்த சண்டை குறித்து தாமரை, மற்றும் பிரியங்காவிடம் கேட்கிறார். அப்போது தாமரை நடந்ததை ஒவ்வொன்றாக சொன்னதால் பிரியங்கா கடுப்பாகி முறைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் கமலிடம் குறும்படம் போட சொல்லி கேட்க உள்ளதாக அவர் நேற்றையை எபிசோடில் சொல்லி இருந்ததால், இன்று இந்த பிரச்சனைக்காக குறும்படம் போடப்படுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.