கெடுத்து குட்டிச்சுவராக்கும் தமிழ்ப் படங்கள் மத்தில... ஆகா இப்படி ஒரு படமா? வியக்கும் பாரதி ராஜா!
'6 அத்தியாயம்' திரைப்படம் சமீபத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது. இந்தப்படத்தை பார்த்துவிட்டு பாரதிராஜா பேசியதாவது..
“பொதுவாக திரைப்படங்களைப் பார்க்க அழைக்கிறவர்கள் படம் முடிந்து செல்லும்போது என் முன் மைக்கை நீட்டிவிடுவார்கள்.. சம்பிரதாயத்திற்காக ஏதோ ஒன்றை சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதால் பெரும்பாலும் நழுவிவிடுவேன்.. ஆனால் இந்த ‘6 அத்தியாயம்’ படத்தைப் பார்த்து முடித்ததுமே, நானே இந்தப்படத்தைப் பற்றி பேசிவிட்டுத்தான் போகவேண்டும் என முடிவு செய்துவிட்டேன்.
இந்தப்படம் திரையிடப்பட்டு முதல் அத்தியாயம் முடிந்ததுமே, எங்கேயோ ஒரு குரூப் கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிகிறதே என நினைத்தேன்.. இரண்டாவது, மூன்றாவது எபிசோடுகளில் அது கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, கடைசி அத்தியாயத்தில் அப்படியே மிரண்டு விட்டேன்.
பொதுவாக பெங்காலிகள் உட்பட வடக்கில் உள்ள படைப்பாளிகளை நான் பெரிதும் பாராட்டுவேன்.. காரணம் அவர்கள் சின்ன படமாக இருந்தாலும், பெரிய படமாக இருந்தாலும் சிந்திக்கும் விதத்தில் வித்தியாசம் காட்டுவார்கள்.. சமீபத்தில் வந்த நம் தமிழ்ப்படங்களில் பல, நம்மைக் கெடுத்து குட்டிச்சுவராக்கிக் கொண்டிருக்கிற இந்த தருணத்தில், இந்த '6 அத்தியாயம்’ படம் பார்த்து நான் உண்மையிலேயே மிரண்டுதான் போனேன் என கூறினார்.
எனக்கும் இதுபோன்ற சிந்தனைகள் இருந்ததுண்டு.. ஆனால் அதை ஒருபோதும் நான் செயல்படுத்த முயன்றதில்லை. கச்சிதமான சிந்தனை என்பது ஒரு சினிமாவுக்கு செய்யக்கூடிய தர்மம். பிரெஞ்ச், ஈரானிய, ஜப்பானிய, சைனீஸ் படங்களையெல்லாம் பார்த்துவிட்டு பாராட்டுகிறோம். தமிழ்நாட்டுல இவ்வளவு பிரமாதமான கலைஞர்கள் இருக்கிறார்கள் என்பதை பார்த்ததுமே, யார் இவர்கள்.. இவர்களை பாராட்டியே ஆகவேண்டும் என்று தான் நானே மைக் பிடித்தேன் என "6 அத்தியாயம் படக்குழுவினரை புகழ்ந்து தள்ளினார் இயக்குனர் பாரதிராஜா.