பெண்கள் பற்றி சர்ச்சைப் பேச்சு... பாக்யராஜுக்கு எதிராகக் கொப்பளித்த ஆந்திர மகளிர் ஆணையம்.. நடவடிக்கைக் கோரி தமிழகத்துக்குக் கடிதம்!
ஆண்கள் சின்ன வீடு வைத்திருந்தாலும் பெரிய வீட்டுக்கும் எந்த இடைஞ்சலும் செய்ய மாட்டார்கள். ஆனால், பெண் கள்ளக் காதலில் இருந்தால், கணவர் கொலை, குழந்தை கொலை என்று செய்திகள் வருகின்றன. பொதுவா ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது . அது உண்மை தான். பெண்கள் இடம் கொடுக்காமல் தவறு நடக்க வழி இல்லை.
பெண்களைப் பற்றி நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் சர்ச்சையாகப் பேசியது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக மகளிர் ஆணையத்துக்கு ஆந்திர மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
'கருத்துகளை பதிவுசெய்' என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினகராக இயக்குநர் பாக்யராஜ் கலந்துகொண்டார். இந்த விழாவில் அவர் பேசும் போது "ஆண்கள் சின்ன வீடு வைத்திருந்தாலும் பெரிய வீட்டுக்கும் எந்த இடைஞ்சலும் செய்ய மாட்டார்கள். ஆனால், பெண் கள்ளக் காதலில் இருந்தால், கணவர் கொலை, குழந்தை கொலை என்று செய்திகள் வருகின்றன. பொதுவா ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது . அது உண்மை தான். பெண்கள் இடம் கொடுக்காமல் தவறு நடக்க வழி இல்லை.பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதில் ஆண்களை மட்டுமே குறை சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. பொள்ளாச்சியில் நடந்த தவறுக்குக்கூட ஆண்களை மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. அதுக்கு இடம் கொடுத்தது பெண்கள்தான். உங்கள் பலவீனத்தைப் புரிந்துகொண்டு, அதை வைத்து எங்கேயெ கொண்டுபோய்விடுகிறான். இதில் ஆண்கள் செய்தது தவறு என்றால், அந்த வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்த பெண்கள் செய்ததும் தவறுதான்” என்று பாக்யராஜ் பேசினார்.
பாக்யராஜின் இந்தப் பேச்சு சர்ச்சையாக உருவெடுத்தது. பாக்யராஜினி இந்தப் பேச்சுக்கு பெண்கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில் ஆந்திர மகளிர் ஆணையம் தமிழக மகளிர் ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில், ‘தேசிய பெண்கள் ஆணையம், மற்ற மாநில ஆணையங்களுக்கு இந்தச் சமூகத்தில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வரவும், பெண்கள் உரிமைக்காகவும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.
ஆனால் இது பற்றி எதுவும் தெரியாமல் சில உதாரணங்களை வைத்துகொண்டு பொதுவாக ஒரு கருத்தை பாக்யராஜ் கூறியுள்ளார். இது பெண்களுக்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளைக் காயப்படுத்தும் விதமாக உள்ளது. இந்த விஷயத்தை சட்டரீதியாகக் கொண்டுசென்று, பாக்யராஜுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாக்யராஜிக்கு எதிராக தமிழக மகளிர் ஆணையம் எதுவும் கூறாத நிலையில், ஆந்திர மகளிர் ஆணையம் கடிதம் எழுதியிருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.