நாட்ல நடக்குற பிரச்சனைய படமாக்கணும்... ராவாக களமிறங்கும் ராஜமௌலி...
சமூக அக்கறையுடன் கூடிய படமொன்றை முதலில் இயக்கவுள்ளேன். இதில் மகேஷ் பாபு நாயகனாக நடிக்கவுள்ளார் என இந்தியாவின் பிரமாண்ட இயக்குனர் ராஜ மௌலி தனது புதிய படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஷாகித் கபூர், ரன்வீர் சிங், தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகியுள்ள பத்மாவதி படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்படத்தில் பாகுபலி படத்தின் பிரம்மாண்டத்தை ஒத்திருக்கிறது என்று பரவலாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் பாகுபலி படத்தின் இயக்குநரே பத்மாவதி இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். "மிக அழகாக வந்துள்ளது. ஒவ்வொரு ஃப்ரேமும் கச்சிதமாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து பாகுபலிக்குப்பின் தனது அடுத்த படம் குறித்து எந்தத் தகவலையும் வெளியிடாமல் இருந்த ராஜமௌலி தற்போது முதன்முறையாக அடுத்த இரு படங்கள் குறித்துப் பேசியுள்ளார்.
அதில், "சமூக அக்கறையுடன் கூடிய படமொன்றை முதலில் இயக்கவுள்ளேன். இதனை டி.வி.வி.தனய்யா தயாரிக்கவுள்ளார். இதனையடுத்து 2019இல் மகேஷ்பாபு நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளேன். இந்தப்படத்தை கே.எல்.நாராயணா தயாரிக்கவுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.
சமூக அக்கறை நிறைந்த, நாட்டு நடப்பை மையப்படுத்தி எடுக்கும் தனது அடுத்த படம் எந்த மொழியில் இருக்கும், யார் நடிக்கவுள்ளார்கள் உள்ளிட்ட எதுவும் இன்னும் முடிவாகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.