‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தில் முதலில் நடித்த இருந்தது அதர்வா தான் என்றும், ஆனால் அதர்வா அப்போது இந்த படத்தில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் மாரி செல்வராஜ் கூறியிருக்கிறார்.
டிஎன்ஏ இசை வெளியீட்டு விழா
அதர்வா, நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘டிஎன்ஏ’. இந்த படம் வருகிற ஜூன் 20-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மாரி செல்வராஜ் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “அதர்வாவிடம் இதை சொல்லியே ஆக வேண்டும். அவருக்கு இதை நினைவிருக்கிறதா என தெரியவில்லை. நான் ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் கதையை முதலில் சொன்ன ஹீரோ அதர்வா தான். அதர்வா நடித்த ‘பரதேசி’ படத்தைப் பார்த்தேன். ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் கதையை எழுதி முடித்ததும் இதை யாரிடம் சொல்லலாம் என யோசித்தேன்.
‘பரியேறும் பெருமாள்’ படத்தை நிராகரித்த அதர்வா
நான் முரளி சாரின் மிகப்பெரிய ரசிகன், ஒருதலைக் காதலுக்கான தைரியத்தை கொடுத்தவர் முரளி சார் தான். அவர் மகன் நாயகனாகிவிட்டார் என்று தெரிந்தவுடன் அவரை என் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என நினைத்தேன். ‘பாணா காத்தாடி’ வெளியான உடனேயே பரியேறும் பெருமாள் கதையை எழுதும் பொழுது நான் அதர்வாவை மனதில் வைத்து தான் எழுதினேன். முரளி சாரின் மகன் நம்மைப் போல தான் இருப்பார், இந்த கதைக்கு சரியாக இருப்பார் என நான் நினைத்தேன்.
ஆனால் அப்போது அவர் மிகவும் பிசியாக இருந்தார். எனவே அது கைகூடாமல் போனது அன்றைய தினம் நான் மிகவும் வருத்தப்பட்டேன் முரளி சாரின் மகனே படத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லையே பிறகு யார் இதற்கு ஓகே சொல்வார்கள் என்று மிகவும் அச்சத்தில் இருந்தேன். முரளி சாரின் மகனே நம்மை இயக்குனர் என நம்பவில்லை வேறு யார் நம்மை இயக்குனர் என நம்புவார் என வருத்தப்பட்டேன். எனது மனைவியிடம் எல்லாம் கூட இது பற்றி நான் பேசினேன். ஆனால் இறுதியில் அதர்வாவை வைத்து அந்த படத்தை எடுக்க முடியாமல் போனது.
அதர்வா பெரிய உயரத்தை அடைவார்
ஆனால் ஒரு நாள் நான் அதர்வாவை சந்தித்து பரியேறும் பெருமாள் கதை உங்களுக்காக எடுக்கப்பட்டது என்று கூறுவேன் என்பது எனக்குத் தெரியும். அதன் பிறகு நான் அதர்வாவை சந்திக்கவே இல்லை. நீண்ட இடைவெளிக்கு பின்னர் நான் அதர்வாவை இப்போதுதான் சந்திக்கிறேன். அதர்வா இன்னும் உயரமாக போகக்கூடிய நடிகர் தான் அதர்வா. அதற்கான அனைத்துத் தகுதிகளும் அதர்வாவுக்கு இருக்கிறது என பேசி முடித்தார்.


