ரூ.6 கோடி செலவில் செயற்கை மதுரை செட்போடும் சண்டைக்கோழி டீம்…
சண்டகோழி - 2 படத்துக்காக ரூ. 6 கோடி செலவில் சென்னையில் செயற்கை மதுரை செட் உருவாக்கப்பட்டு வருகிறது
லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான படம் ‘சண்டக்கோழி’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது.
முதல் பாகத்தை இயக்கிய லிங்குசாமியே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். படத்தை விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த ராஜ்கிரண் இப்படத்திலும் நடிக்கிறார்.
படத்தின் கதை களம் மதுரை. ஆனால் ஒட்டுமொத்த யூனிட்டையும் மதுரைக்கு அழைத்துச் செல்வதிலும், மக்கள் கூடும் இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதிலும் சிக்கல்கள் இருக்கும் என்பதால் படப்பிடிப்பை சென்னையிலேயே நடத்த முடிவு செய்துள்ளது படக்குழு.
இதற்காக சென்னை பின்னி மில்லில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் மதுரையின் முக்கிய வீதிகளை அப்படியே மறு உருவாக்கம் செய்கிறார்கள்.
இதில் 500 கடைகள் கொண்ட பஜார், பெரிய கோவில் ஆகியவை முக்கியமானதாக இருக்கும்.
ஆறு கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்த செயற்கை மதுரையை கலை இயக்குனர் ராஜீவன் வடிவமைக்கிறார். 500 தொழிலாளர்கள் இதில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
என்னதான் செட் போட்டாலும், ஒரிஜினல் மதுரை இருக்கும்போது செயற்கை மதுரை தேவையா? செலவைக் குறைக்கலாமே!