AR Rahman Mother Video : கரீமா பேகம் ரஹ்மானின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதை  முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ஏ.ஆர்.ரஹ்மான்  தாயாருக்கு அஞ்சலி செலுத்தினார்.

பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான், 'ரோஜா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பிற மொழி படங்களுக்கும் இசையமைத்து வந்த ஏ.ஆர்.ரஹ்மான் மிகக் குறுகிய காலத்திலேயே இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளரானார். மேலும், 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தின் இசைக்காக பெரிதும் பேசப்பட்ட ரஹ்மான், அப்படத்திற்காக இரு ஆஸ்கார் விருதுகளையும் வென்றார்.

புகழின் உச்சியில் இருக்கும் இவரது இளமை காலம் கரடு முரடாக இருந்துள்ளது. சிறு வயதிலேயே தந்தை காலமாகிவிட்டதால், தாயார் கரீமா பேகம் அரவணைப்பில் வளர்க்கப்பட்டார். கடுமையான வறுமைச் சூழலை அவர்களது குடும்பம் எதிர்கொண்டாலும், தன் மகனின் இசைக் கலைஞனாக வேண்டும் என்ற லட்சிய பயணத்தில் எவ்விதத் தடங்கலும் ஏற்படாமல் அவரது தாயார் பார்த்துக் கொண்டார். ஏ.ஆர்.ரஹ்மான் தந்தை ஒரு இசைக்கலைஞர் என்பதால் அவரிடம் இருந்த ஏராளமான இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு அதிலிருந்து கிடைத்த வருவாய் மூலம் தனது குடும்பத்தினை நடத்தி வந்தார். இது குறித்து நேர்காணல் ஒன்றில் ஏ.ஆர். ரகுமான் தெரிவித்திருந்தார்.

இசைப்புயலின் முன்னேற்றத்திற்கு வித்திட்ட அவரது தயார் கரீமா பேகம் வயது மூப்பு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். இந்நிலையில் நேற்று கரீமா பேகம் ரஹ்மானின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ஏ.ஆர்.ரஹ்மான் தாயாருக்கு அஞ்சலி செலுத்தினார்.

அந்த வீடியோவுடன் 'எனக்கு அம்மாவைத் தவிர வேறு எதுவும் இல்லை'. அதனால் என் அம்மா இங்கே இருக்கிறார், அவளுடைய ஆசீர்வாதம் என்னுடன் இருக்கிறது. அவள் எல்லா வழிகளிலும் வந்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ," என்று அவர் கூறியிருந்தார்.

View post on Instagram