AR Rahman : தமிழக அமைச்சருடன் ஏ.ஆர்.ரகுமான் திடீர் சந்திப்பு.. பின்னணி என்ன? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
சினிமாவில் பிசியாக இயங்கி வரும் ஏ.ஆர்.ரகுமான் (AR Rahman), இன்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நேரில் சந்தித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். தற்போது தமிழில் இவர் கைவசம் மணிரத்னத்தின் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன், பார்த்திபன் இயக்கும் இரவின் நிழல், விக்ரம் நடிக்கும் கோப்ரா, சிவகார்த்திகேயனின் அயலான் போன்ற படங்கள உள்ளன.
இவ்வாறு பிசியாக இயங்கி வரும் அவர், இன்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை (anbil mahesh) நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது எடுத்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அன்பில் மகேஷ்.
இந்த சந்திப்பு குறித்து அவர் கூறியதாவது: “ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் என்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சந்தித்தார். அப்போது, தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் சென்னையில் தான் முன்னெடுக்க இருக்கும் சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் புதிய முயற்சி குறித்து விளக்கிக் கூறினார். அதற்குத் தேவையான உதவிகளைச் செய்து தருவதாகக் கூறி அவருக்கு உறுதியளித்தேன்” என பதிவிட்டுள்ளார்.
தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் சென்னையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் முன்னெடுக்க இருக்கும் சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் புதிய முயற்சி என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.