ஆஸ்பத்திரியில் அட்மிட்டா?... சூரரைப்போற்று ‘பொம்மி’க்கு என்ன ஆச்சு - பதறிப்போன ரசிகர்கள்
சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் அபர்ணா பாலமுரளி (Aparna balamurali).
மலையாள நடிகையான அபர்ணா பாலமுரளி தமிழில் 8 தோட்டாக்கள் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து ராஜீவ் மேனன் இயக்கிய சர்வம் தாளமயம் படத்தில் ஜீவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தார். இந்த இரண்டு படங்களிலும் அவரை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
ஆனால் சுதா கொங்கரா இயக்கத்தில் கடத்தாண்டு ஓடிடி-யில் வெளியான “சூரரைப் போற்று” என்ற படம் மூலமாக ஒட்டுமொத்த கோலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்துவிட்டார் அபர்ணா.
இப்படத்தில் சூர்யாவின் மனைவியாக பொம்மி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்று சொல்வதைவிட அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார். இதையடுத்து அவருக்கு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், நடிகை அபர்ணா பாலமுரளியின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. அவர் கடும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாகவும் கூறப்பட்டு வந்தது. இதனால் அவரது ரசிகர்கள் பதறிப்போயினர்.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அபர்ணா, தான் நலமுடன் இருப்பதாகவும், தன்னுடைய உடல்நிலை பற்றி பரவி வரும் தகவல் உண்மையல்ல, அதை யாரும் நம்ப வேண்டாம் எனக்கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.