கன்னட திரையுலகில் தடம் பதித்து தயாரிப்பு, மற்றும் விநியோகஸ்த நிறுவனமான KRG ஸ்டுடியோஸுடன் இணைத்து, இயக்குனர் அஞ்சலி மேனன் தனது முதல் தமிழ் திரைப்படம் இயக்குவதை உறுதி செய்துள்ளார். 

தனித்துவமான கதைகளை இயக்கி பிரபலமானவர் பெண் இயக்குனர் அஞ்சலி மேனன். இவரின் முந்தைய படைப்புகளான 'பெங்களூர் டேஸ்', 'மஞ்சாடிக்குரு', 'உஸ்தாத் ஹோட்டல்', 'கூடே' ஆகிய திரைப்படங்களும், சமீபத்தில் வெளியான 'ஒண்டர் வுமன்' ஆகிய திரைப்படமும் அனைத்து தரப்பினராலும் பெரும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

தனது படைப்புகளில் தனி முத்திரை பதிக்கும் அஞ்சலி மேனன் இம்முறை KRG ஸ்டுடியோஸ் உடன் இணைத்துள்ளார். திரைப்பட தயாரிப்பு, விநியோகஸ்த நிறுவனமான KRG முதல் முறையாக தமிழில் திரைப்பட தயாரிப்பில் அடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில், அஞ்சலி மேனனுடன் இணைந்து தனது முதல் படைப்பை தமிழில் எடுக்க உள்ளார். இதுகுறித்த அதிகார பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

KRG தயாரிப்பு நிறுவனத்துடன் இணைவது பற்றி அஞ்சலி மேனன் கூறுகையில் "KRG ஸ்டுடியோஸ் உடன் இணைய இருக்கும் இவ்வேளையில் மக்களை ஈர்க்க கூடிய வகையில் நமது கலாச்சாரத்தை மையமாக வைத்து உலகத்தரத்தில் படங்கள் எடுப்பதிலும், இந்தியாவில் உள்ள பல்வேறு மொழி, கதை நிலப்பரப்புக்களுக்கு அப்பால் பார்வையாளைகளை ஒன்றிணைத்து அவர்கள் மறக்கவே முடியாத, சிந்தனையைத் தூண்டுகிற அதே சமயம் பொழுது போக்கு நிறைந்த திரைப்பட பயணங்களுக்கு கூட்டி செல்ல ஆர்வமாக உள்ளோம்" என்றார்.விரைவில், இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர் - நடிகைகள், இசையமைப்பாளர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.