அஜித்திடம் ஆசி பெற நினைத்த 5 வயது சாதனைச் சிறுவன்! ... அவமானப்படுத்திய ’தல’பி.ஆர். ஓ!
சமீபத்தில், அஜித்தின் பி.ஆர்.ஓ சுரேஷ் சந்திராவிடம் ரசிகர் ஒருவர் 'விஸ்வாசம்' படம் குறித்து, போனில் கேட்டபோது அவரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார். இந்த ஆடியோ வெளியாகி பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது.
நடிப்பைத் தாண்டி, ஒரு நடிகர் ரசிகர்கள் மனதில் நல்ல மனிதர் என்று இடம் பிடிப்பது சாதாரண விஷயம் இல்லை. அப்படி தன்னுடைய நல்ல குணத்தாலும், நடவடிக்கையாலும் ரசிகர்கள் மத்தியில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்தவர் நடிகர் அஜித்.
இவரின் ரசிகர்களின் பலம் பற்றி இவருடைய திரைப்படம் குறித்து தகவல்கள் வெளியாகும் போதும், இவருடைய திரைப்படம் ரிலீஸ் ஆகும் போது தான் பார்க்க முடியும்.
மேலும் தல குறித்து எந்த தகவல் வெளியானாலும் அதனை ட்ரெண்டாக்கி விடுவார்கள் ரசிகர்கள். இது அஜித் ரசிகர்களின் தனி சிறப்பு என்றே கூறலாம்.
இந்நிலையில் அஜித்தின் பெயருக்கு களங்கம், ஏற்படுத்தும் விதத்தில் இவரின் பி.ஆர்.ஓ நடந்து கொண்டுள்ளது அஜித் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்தில், அஜித்தின் பி.ஆர்.ஓ சுரேஷ் சந்திராவிடம் ரசிகர் ஒருவர் 'விஸ்வாசம்' படம் குறித்து, போனில் கேட்டபோது அவரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார். இந்த ஆடியோ வெளியாகி பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, தற்போது அஜித்திடம் ஆசி பெற விரும்பிய, ஸ்கேட்டிங் விளையாட்டில் சர்வதேச அளவில் தங்கம் வென்று உலக சாதனை படைத்து, தமிழ் நாட்டிற்கும் பெருமை சேர்த்த சிறுவனின் தந்தையையும் அவர் தரக்குறைவாக திட்டி உள்ள சம்பவம் பரபரப்பாகியுள்ளது.
இந்த சாதனையை நிகழ்த்திய சிறுவன் தவிஷ்ஷை ஊக்குவிக்கும் விதத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்தினர்.
அந்தவகையில் சாதனை சிறுவன் தவிஷ், தல அஜித்தை சந்தித்து ஆசி பெற்று, புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என விரும்பியுள்ளார்.
மகனின் விருப்பத்தை நிறைவேற்ற தவிஷ்ஷின் தந்தை அஜித்தின் பி.ஆர்.ஓ.வை நாடியுள்ளார். இதுகுறித்து ஒரு நாள் சுரேஷ் சந்திராவை அவர் சந்தித்தபோது அசிங்கமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் பணம் பறிக்க இதுபோல் நடந்து கொள்வதா என அவர் மீது பழி சுமத்தி அபத்தமான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதற்கு சாதனை சிறுவன் தவிஷின் தந்தை நன்கொடை எதுவும், தேவை இல்லை, ஆசி மட்டுமே போதுமென்று... இயன்ற அளவிற்கு எடுத்து கூறியும் சுரேஷ் சந்திரா அவரிடம் மிகவும் கடுமையாக நடந்துகொண்டுள்ளார்.
இவரின் செயலுக்கு அஜித் ரசிகர்கள் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளனர். சுரேஷ் சந்திராவின் செயல், அஜித்தின் பெயரையும் கெடுப்பது போல் உள்ளதாக தங்களுடைய ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.
சினிமா மட்டுமின்றி, விளையாட்டு வீரர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அஜித். சமீபத்தில் பேட்மிட்டன் வீராங்கனை பி.வி. சிந்துவை அவருடைய வீட்டிற்கே வரவழைத்து உபசரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், 5 வயதிலேயே ஸ்கேட்டிங் விளையாட்டில் உலக சாதனை நிகழ்த்தி தங்க பதக்கம் வென்று, தமிழகத்திற்கே பெருமை சேர்த்த இளம் தங்க மகனின் இந்த ஆசையைக் கூட நிறைவேற்றாமல், பி.ஆர்.ஓ சுரேஷ் சந்திரா தவிஷின் தந்தையிடம் கடுமையாக நடந்து கொண்டது எந்த விதத்தில் நியாயம் என பல்வேறு தரப்பில் இருந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.