மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 25 ராணுவ வீரர்கள் குடும்பங்களுக்கு வீடு வழங்கிய அஜித் பட வில்லன்...
மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 25 ராணுவ வீரர்கள் குடும்பங்களுக்கு இந்தி நடிகர் விவேக் ஓபராய் வீடுகள் வழங்கியுள்ளார்.
கடந்த மாதம் சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் மாவோயிஸ்டுகள் நடத்திய கொடூர தாக்குதலில் 25 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. மத்திய, மாநில அரசுகளும் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி அளித்து வருகின்றன.
குறிப்பாக, கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் ராணுவ வீரர்கள் குழந்தைகளின் படிப்புச் செலவை ஏற்பதாகக் கூறினார். மேலும், ஐபிஎல் போட்டியில் பெற்ற ஆட்டநாயகன் விருதுக்கு கிடைத்த பரிசையும் ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு அர்ப்பணித்தார்.
இதற்கிடையே, ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு இந்தி நடிகர் விவேக் ஓபராய் தற்போது வீடு வழங்கி உதவி செய்துள்ளார். அதன்படி, தனது கரம் கட்டுமான நிறுவனம் மூலம், மஹாராஷ்டிரா மாநிலம், தானேயில் 25 ஃபிளாட்டுகளை, ஓபராய் வழங்கியுள்ளார். விவேக் ஓபராய், தற்போது அஜித்தின் விவேகம் படத்தில் வில்லனாக நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.