Ajithkumar: ‘தல’க்கு நோ சொன்ன அஜித்.... முடிவுக்கு வருமா ‘தல - தளபதி’ ரசிகர்கள் மோதல்?
நடிகர் அஜித் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை அவரது ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இனி தன்னை ‘தல’ என அழைக்க வேண்டாம் என அவர் அந்த அறிக்கை மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வாழு… வாழ விடு.. என்ற கொள்கையுடன் இருப்பவர் நடிகர் அஜித்குமார். ரசிகர்கள் தம் பின்னால் வந்து நேரத்தை வீணடிக்காமல் அவர்களது சொந்த பிரச்சினைக்காக உழைக்க வேண்டும் என்று நினைப்பவர். ரசிகர் மன்றங்களை கலைத்தாலும், தமது ரசிகர்கள் மீதான அன்பை அவர் எப்போதும் குறைத்துக்கொண்டதில்லை. தம் ரசிகர்கள், மற்றும் நலம் விரும்பிகளுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் அஜித் நன்றி கூறி வருகிறார்.
திரைத்துறையில் தம்மை யாருக்கும் போட்டியாக நினைக்காத தல அஜித், சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில்லை. ஆனால், வலைதளங்களில் தமது ரசிகர்கள், பிற நடிகர்கள் அவர்களின் குடும்பங்களை விமர்சிக்கக் கூடாது என்று அடிக்கடி அறிவுரை கூறியிருக்கிறார்.
அதேபோல் தான் தளபதி விஜய்யும் இருந்து வருகிறார். அஜித்தும் விஜய்யும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தாலும், அவர்களது ரசிகர்கள் இன்றளவும் எலியும் பூனையுமாக சண்டையிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
ட்விட்டரில் கட்டி உருளுவது என்பது விஜய் - அஜித் ரசிகர்களுக்கு பழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. எப்போதும் தேவையில்லாத விஷயங்களை வைத்து தல - தளபதி ரசிகர்கள் மோசமாக ட்ரோல் செய்வது பல சமயங்களில் திரைப்பிரபலங்களை கூட கடுப்பேற்றி இருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க, நடிகர் அஜித் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை அவரது ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இனி தன்னை ‘தல’ என அழைக்க வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் ரசிகர்கள் மோதலை தவிர்க்கலாம் என்ற நோக்கில் அஜித் இத்தகைய முடிவை எடுத்திருக்கலாம் என கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. அஜித்தின் இந்த நடவடிக்கையால் தல - தளபதி மோதல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.