திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில்... தந்தை ரஜினிகாந்த் ஆரோக்கியத்திற்காக மகள் சிறப்பு வழிபாடு!
ரஜினிகாந்தின் இரண்டாவது மகள், சௌந்தர்யா தன்னுடைய தந்தையின் உடல் நலனுக்காக திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில், மகன் மற்றும் கணவருடன் சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஒரு சில மாதங்களுக்கு முன்பு தான் அமெரிக்காவில் உள்ள மாயோ மருத்துவமனையில், முழு உடல் பரிசோதனை மேற்கொண்டு, சென்னை வந்த நிலையில் தற்போது ரஜினிகாந்தின் இரண்டாவது மகள், சௌந்தர்யா தன்னுடைய தந்தையின் உடல் நலனுக்காக திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில், மகன் மற்றும் கணவருடன் சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'அண்ணாத்த' திரைப்படத்தில், இன்னும் சில காட்சிகள் எடுக்கப்பட வேண்டியுள்ள நிலையில் மீதமுள்ள படத்தின் பணிகளை முடிப்பதில் படக்குழு தீவிரமாக செயல் பட்டு வருகிறது. அதே நேரத்தில், இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் துவங்கப்பட்டு, மற்றொரு புறம் அவசர அவரசமாக நடந்து வருகிறது. காரணம் இந்த படத்தின் பணிகளை கூடிய விரைவில் முடித்து, வரும் தீபாவளி தினத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
இந்த படத்தின் பணிகள் கொரோனா இரண்டு அலைகளை கடந்து, மிகவும் பாதுகாப்புடன் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஹைதராபாத்தில் நடந்த 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொண்ட போது, படக்குழுவில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. பின்னர் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது, தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட போதிலும், உயர் ரத்த அழுத்தம் காரணமாக தனியார் மருத்துவமனையில் இரண்டு நாள் சிகிச்சை பெற்ற பின்னரே சென்னை திரும்பினார்.
சில நாட்கள் ஓய்வில் இருந்த நிலையில், தன்னுடைய உடல் நலனை கருத்தில் கொண்டு அரசியலை விட்டே ஒதுங்குவதாகவும் அறிவித்தார். இவர் இந்த முடிவை எடுக்க காரணம் கூட மகள்கள் தான் என கூறப்பட்டது. ஒருவழியாக கடந்த ஏப்ரல் மாதம் 'அண்ணாத்த' ஷூட்டிங் பணிகளை முடித்து கொடுத்து விட்டு, தனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இடமான, மாயோ கிளினிக் சென்று முழு உடல் பரிசோதனை செய்து கொண்டு சென்னை திரும்பினார்.
தற்போது அடுத்த அடுத்த படங்களில் நடிப்பது குறித்து, சில இயக்குனர்களிடம் ரஜினிகாந்த் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், தந்தை உடல் நலனுக்காக இவரது மகள், கணவன், மற்றும் மகனுடன் சௌந்தர்யா ரஜினிகாந்த் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.